

சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் பட்ஜெட் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தன் 24-வது படத்திலும் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் 25-வது படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சுதா கொங்காராவுடன் இணையும் படம் நடிகர் சூர்யா நடிக்க வேண்டிய ’புறநானூறு’ கதையாம். தற்போது, இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனராம். சிவகார்த்திகேயன் படத்தில் ஜெயம் ரவி இணைந்திருக்கும் தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகும் இப்படம் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி உருவானால், இதுவே சிவகார்த்திகேயனின் அதிக பட்ஜெட் படமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.