
தவறானவரைத் திருமணம் செய்துவிட்டேன்: பிரதீப் ஆண்டனி
நடிகர் பிரதீப் ஆண்டனி மனைவியைப் பிரிந்ததாக அறிவித்துள்ளார்...

பிரதீப் ஆண்டனி
நடிகர் பிரதீப் ஆண்டனி தன் மனைவி மற்றும் மகனைப் பிரிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இந்நிகழ்ச்சியில் குறுகிய காலமே இருந்தாலும், மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு, உதவி இயக்குநராக இருந்த இவர், அருவி, வாழ், டாடா உள்ளிட்ட படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். பிரதீப் தனது நீண்டநாள் காதலியான பூஜாவை திருமணம் செய்துகொண்டார். பிரதீப் - பூஜா தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்திருந்தது.
இந்த நிலையில், பிரதீப் ஆண்டனி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், “என் நண்பர்களிடம் இந்தக் குழந்தையை விற்றுவிடுவதைப் பற்றி நான் நிறைய முறை கேலியாகப் பேசியிருக்கிறேன். ஒரு குழந்தைக்குப் பொறுப்பாக இருக்கும் அளவுக்கு நான் மிகவும் பொறுப்பற்றவனாகவும், எதையும் யோசிக்காமல் செயல்படுபவனாகவும் இருக்கிறேன் என நினைத்ததால், பூஜா கர்ப்பமானபோது, சிலரிடம் “இந்தக் குழந்தைக்காக முன்பதிவு செய்து கொள்ளுங்கள்; அதற்காக சில லட்சங்கள் எனக்கு கொடுங்கள்” எனச் சொன்னேன்.
ஆனால், குழந்தை பிறந்த பிறகு, ஏதோ ஒரு விதத்தில் அதன் மீது எனக்கு பாசம் ஏற்பட்டுவிட்டது. அது நான் சொல்வதைக் கேட்டு சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் என் கைகளில் ஏதோ ஒன்று மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும்போது, நானும் புதிதாகப் பிறந்தவன் போல உணர்ந்தேன். ஆனால், இப்போது அது என்னிடம் இல்லை.
அந்தக் குழந்தையுடன் நான் கடைசியாக மகிழ்ச்சியாக இருந்தது இதுதான். இப்போது, அதை நான் பார்த்து ஒரு மாதமாகிவிட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே நான் அந்தக் குழந்தையை விட்டுக்கொடுத்துவிட்டேன், மனதளவில் கைவிட்டுவிட்டேன். ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக என்னை உள்ளுக்குள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. ஏனென்றால், எனக்கு எப்போதுமே ஒரு குடும்பம் வேண்டும். ஒரு நல்ல அப்பாவாக இருக்க வேண்டும். நான் வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் எதிரான ஒரு சூழலை என் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்று எப்போதுமே நினைத்திருக்கிறேன். ஆனால் நான் தோற்றுவிட்டேன்.
“நீ எதை அதிகமாகப் பயப்படுகிறாயோ, அதையே நீ ஈர்க்கிறாய்” என்பதை இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன்.
நான் தவறான நபரைத் திருமணம் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். திருமணமானதிலிருந்து ஒவ்வொரு நாளும் மோசமான மனிதனாக மாறிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் எனக்குச் சம்பந்தமே இல்லாத, என் உலகத்தின் ஒரு பகுதியாக இல்லாத ஒருவரின் அருகில் விழித்தெழுந்துகொண்டிருந்தேன். என் உலகத்தின் ஒரு பகுதியாக இருக்க அவளும் என்னைப் புரிந்துகொள்ளவோ, முயற்சி செய்யவோ இல்லை. அவள் இன்னும் அவளுடைய குடும்பத்துடனும், அவளுடைய வாழ்க்கையுடனுமே இருந்தாள்.
ஒவ்வொரு நாளும் நான் ஒருவருடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு இருந்தது. இன்னொருவருடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதை எப்படி சமாளிப்பது என்று உண்மையில் எனக்கே தெரியவில்லை. தினமும் இரண்டு முற்றிலும் எதிர்மறையான மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு, தாங்கள் யாராக இருக்கிறார்களோ அதற்காகவே ஒருவரை ஒருவர் வெறுப்பது போல இருந்தது. அது எங்களிருவருக்குமே அநியாயமாகத் தோன்றியது.
என்னுடைய முந்தைய உறவால் நான் ஏற்கனவே பலவீனமாக இருந்தேன். அந்தப் பலவீனமான நேரத்தில், எங்கிருந்தாவது கிடைத்த கொஞ்சம் அன்பையாவது பற்றிக்கொண்டேன். அந்த அன்புக்கு இன்றுவரை நான் உண்மையாக இருந்தேன். அதற்காக நான் நிறைய இழந்துவிட்டேன். என்னுடைய பலவீனமும், அன்புக்கான என் ஏக்கமும் எனக்கு அதிக விலையைக் கொடுத்துவிட்டது.
இப்போது என் திருமண வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்திருக்கிறேன். அந்த உறவில் என்னால் மூச்சுவிடவே முடியவில்லை. அவளுக்கும் இனி என் மீது அன்பு இல்லை என்று நினைக்கிறேன். எப்படியிருந்தாலும், இன்று அந்தக் குழந்தையை நினைத்துவிட்டேன். அதற்கு ஒரு பெயர்கூட என்னால் வைக்க முடியவில்லை. அது எப்போதுமே என் மனதில் “அது” என்றுதான் இருந்தது.
இப்போது நான் என் உணர்வுகளை வெளிப்படையாகப் பொதுவில் பகிர்வதைப் பற்றி என்னைத் தொடர்புகொண்டு பேசுபவர்களின் அழைப்புகள் தொடர்ந்து வரப்போகின்றன. “உன் உணர்வுகளை இப்படிப் பொதுவில் வெளிப்படுத்தாதே” என்று என்னை அமைதியாக்கப் பலர் முயற்சி செய்வார்கள்.
ஆனால் உண்மையில், என்னிடம் பேசுவதற்கு யாருமே இல்லை. சண்டையிட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் வெறுக்கும் பெற்றோருடன் இருப்பதைவிட, அந்தக் குழந்தை அதன் அம்மாவுடன் இருப்பதே நல்லது என்று நினைத்தேன். நான் வளர்ந்த விதியையே ஏற்றுக்கொண்டுவிட்டேன். என்றென்றும் ஒரு அனாதையாகவே இருக்க வேண்டியவன் நான்.” எனக் கூறியுள்ளார்.
பிரதீப் ஆண்டனியின் இப்பதிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.
Actor Pradeep Antony has announced that he has separated from his wife and son.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






