'டான்' ஆக வென்றாரா சிவகார்த்திகேயன்? - திரை விமர்சனம்

'டான்' சக்கரவர்த்தி முதல் படத்திலேயே 100 கோடி வசூல், ஃபிலிம் ஃபேர் விருது வென்றதைப்போல, டானை இயக்கிய நிஜ சிபி சக்கரவர்த்தி தனது முதல் படத்தில் 100 கோடி வசூல், ஃபிலிம் ஃபேர் விருதுகளை வெல்வாரா?
'டான்' ஆக வென்றாரா சிவகார்த்திகேயன்? - திரை விமர்சனம்

'டான்' சக்கரவர்த்தி முதல் படத்திலேயே 100 கோடி வசூல், ஃபிலிம் ஃபேர் விருது வென்றதைப்போல, டானை இயக்கிய நிஜ சிபி சக்கரவர்த்தி தனது முதல் படத்தில் 100 கோடி வசூல், ஃபிலிம் ஃபேர் விருதுகளை வெல்வாரா? அதை சிவகார்த்திகேயன் மூலமாக நிஜ ரசிகர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் சிபி சக்கரவர்த்தி.   

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ராதா ரவி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்கியுள்ளார். 

படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற கோட்பாட்டுடன் கண்டிப்பான தந்தையாக மகனை வளர்க்கும் சமுத்திரக்கனி, என்ஜினீயரிங் படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என இந்திய சமூகத்தின் பெரும்பான்மை தந்தையாக வந்து நிற்கிறார். இன்னொருபுறம் கல்லூரியில் கல்வியைவிட ஒழுக்கம்தான் முக்கியம் என்ற கோட்பாட்டுடன் இருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

இவர்கள் இருவரது கோட்பாட்டையும் கடந்து தனக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறார் சக்கரவர்த்தியாக வரும் சிவகார்த்திகேயன் என்பதுதான் டான் படத்தின் கதை.

இந்தக் கதைக்கு நகைச்சுவைக் கலந்த பாணியைக் கையிலெடுத்து கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் சிபி சக்கரவர்த்தி. இதில் சிவகார்த்திகேயன் இருப்பது அவருக்குக் கூடுதல் பலமாகிவிட்டது. மீண்டும் கல்லூரிக்குச் சென்றதைப் போல உணர்ந்து கவுன்டரில் கலாட்டா செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். முதல் பாதியில் வரும் சில சேட்டைகள் இங்கு பெரும்பாலானோரது கல்லூரி நாள்களை நினைவுபடுத்தும். கல்லூரி கலை நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அண்ட் கோ அடிக்கும் லூட்டி நிச்சயம் நிறைய பேரின் கல்லூரி கலைநிகழ்ச்சி நாள்களை நினைவுபடுத்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

பள்ளி, கல்லூரிக்கு அப்பாக்களை மாற்றி கூட்டிவருவது போன்ற தமிழ் சினிமாவில் அடித்துத் துவைக்கப்பட்ட காட்சிகளாக இருந்தாலும், அதுபோன்ற காட்சிகளை சற்று முன்பின் மாற்றிக் காண்பித்து சலிப்பு உண்டாகாதவாறு டெலிவரி செய்து பலம் சேர்த்துள்ளார் படத் தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன்.

பிரியங்கா மோகன் வரும் காட்சிகள் பெரிதளவில் தாக்கத்தை உண்டாக்காதவாறு இருப்பது சற்று பின்னடைவாக அமைந்துள்ளது.

முதல் பாதி முழுக்க கலாட்டாவாகச் சென்றால், இரண்டாம் பாதி முழுக்க உணர்வுப்பூர்வமாக நகர்கிறது. இதிலும் பெரும்பான்மையான வீடுகளில் நிகழும் பிரச்னைகள் மற்றும் உரையாடல்களைப் பார்க்க முடியும் என்பதால், கலாட்டாவான கல்லூரிப் பகுதி மட்டுமின்றி இரண்டாம் பாதி வசனங்கள் மற்றும் காட்சிகளிலும் நம்மைப் பொருத்திக்கொள்ள முடியும் என்பதுதான் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

என்ஜினீயரிங் படிப்பு, பாடம் கற்பிக்கும் முறை, ஒவ்வொரு தனிநபரின் தனித்துவத் திறமை குறித்துப் பேசியிருந்தாலும் இதற்கென ஆழமாக மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

3 இடியட்ஸ்/நண்பன் படத்தை எடுத்துக்கொண்டால் அதில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பின்னணி இருக்கும். அதுவே கதை இறுதியை அடையச் செய்யும். இதில் இறுதி மட்டுமே உள்ளது. இறுதியை அடைவதற்கான சரியான பாதை இல்லை. உதாரணத்திற்கு 3 இடியட்ஸ்/நண்பன் படத்தில் ஒவ்வொருவரிடமும் உள்ள திறமை காட்டப்பட்டிருக்கும், அதை வைத்துக் கொண்டுதான் என்ஜினீயரிங் படிப்பு விமர்சிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இதில் சக்கரவர்த்திக்கென்று உள்ள பிரத்யேக திறமை எதையும் காண்பிக்காமலே வெறுமன என்ஜினீயரிங் படிப்பு விமர்சிக்கப்படுகிறது. இது என்ஜினீயரிங் மாணவர்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதை உணர்ந்து சற்று கூடுதல் பொறுப்புணர்வுடன் கையாண்டிருக்கலாமோ என்கிற எண்ணம் எழுகிறது.

சக்கரவர்த்தி திடீரென்று இயக்குநராக முன்னேறிச் செல்வது ஒரே சாங்கில் ஓஹோன்னு வந்ததைப்போன்ற உணர்வைத் தருகிறது.

கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி இயக்குநராகியுள்ள நீங்களே சொல்லுங்கள் சிபி சக்கரவர்த்தி, ஒரே பாட்டில் ஓஹோன்னு இயக்குநராகிவட முடியுமா?

குறைந்தபட்சம் சக்கரவர்த்தியிடம் இதற்கான விதை உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளாவது எங்கேனும் இடம்பெற்றிருக்கலாம். 

படக் கதாபாத்திரங்களில் திருப்பம் ஏற்படுவது வழக்கம். இந்தப் படத்திலும் கதாபாத்திரங்கள் கடைசியில் மாறுகின்றன. ஆனால், திடீரென ஏன் மாறுகின்றனர், எதற்கு மாறுகின்றனர் என்பது நமக்குப் புரியாத புதிராக உள்ளது. அதைத் தவிர்த்திருக்கலாம். 

மேலே சொன்னபடி சிவகார்த்திகேயன் நடிப்பில் தெம்பாக உள்ளார். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி நடிப்பும் கூடுதல் பலமாக உள்ளது. வழக்கமாக பின்னணி இசையில் பக்கபலமாக இருக்கும் அனிருத், இந்தப் படத்தில் பாடல்களில் மட்டுமே பக்கபலமாக இருக்கிறார்.

இயக்குநராகிவிட வேண்டும் என்கிற எண்ணம் மற்றும் வாழ்க்கையில் நிகழ்ந்த கதையை மட்டும் நம்பி வெற்றியாளரான சக்கரவர்த்தி இரண்டாவது, மூன்றாவது படங்களில் எதிர்கொள்ளப்போகும் இன்னல்கள் என்ன என்பது நிஜ சக்கரவர்த்திக்குத் தெரிந்திருக்கும். ஆனால், இயக்குநராகும் எண்ணம் மட்டுமே நம்முள் இருக்கும் திறமை என்பதுபோல் டானைக் காட்டியுள்ளார்.

இந்தக் குறையைத் தாண்டி, அனைவராலும் பொருத்திக்கொள்ளக்கூடிய உணர்வுகளை நேர்த்தியான நடிகர்கள் மூலம் சரியாகக் கடத்தி அனைத்துத் தரப்பினரும் நிச்சயம் ரசித்துப் பார்க்கக்கூடிய ஒரு டானை நம்மிடம் ஒப்படைத்துள்ளார் சிபி சக்கரவர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com