மகாத்மா பெயரில் மகா ஊழல்
இந்தியா என்றால் ஊழல், ஊழல் என்றால் இந்தியா'' என்று உலகமே வியக்கும்வண்ணம் திகார் சிறையில் கம்பி எண்ணும் ஒரு ராசா செய்த 2ஜி கைப்பேசி ஊழலுக்கு கைமேல் பலன் கிட்டியது. எங்கெங்கு காணினும் ஊழலடா என்று அரசின


இந்தியா என்றால் ஊழல், ஊழல் என்றால் இந்தியா'' என்று உலகமே வியக்கும்வண்ணம் திகார் சிறையில் கம்பி எண்ணும் ஒரு ராசா செய்த 2ஜி கைப்பேசி ஊழலுக்கு கைமேல் பலன் கிட்டியது.
எங்கெங்கு காணினும் ஊழலடா என்று அரசின் ஒவ்வொரு துறையிலும் ஊழல். ஓர் அரசின் தூண்களாயுள்ள நாடாளுமன்றம், மாநிலப் பேரவைகள், மாநகராட்சிகள், நகராட்சி, பேரூராட்சி, கிராமப் பஞ்சாயத்துகள், அரசுத்துறை ஆட்சித்தலைமை நிர்வாகம், வருவாய்த்துறை, தொழில்துறை, வேளாண்மைத்துறை, தொலைத்தொடர்புத்துறை, காவல்துறை, நீதித்துறை எல்லாமே ஊழல் சேற்றில் மூழ்கியுள்ளன.
வேலை வாங்க லஞ்சம், வேலை நிகழ லஞ்சம், வேலை மாற்றத்துக்கு லஞ்சம், வேலையை மாற்றாமல் இருக்க லஞ்சம். காவல்துறையில் முறையிடுவதற்கு லஞ்சம். எஃப்.ஐ.ஆர். போடுவதற்கு லஞ்சம். எஃப்.ஐ.ஆர். போடாமல் இருக்கவும் லஞ்சம். நீதி பெறவும் லஞ்சம். நீதியை நிறுத்துவதற்கும் லஞ்சம். ஊழலின் உச்சகட்டமாக எகிப்து இருந்தபோது மக்கள் ஒன்றுதிரண்டு ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.
இதைப்போல் இந்தியாவில் அண்ணா ஹஸôரேயின் வலுவான இயக்கம் வெற்றி பெறுமானால், ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றி ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் - அமைச்சராயிருந்தாலும்கூட மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை பெற வழிவகை செய்யும். சுற்றிவளைத்து உச்ச நீதிமன்றம் சென்று ஊழல் வழக்குகள் திசை திரும்பாமல் உடனுக்குடன் தண்டனை பெற வேண்டுமென்பதே ஜன் லோக்பால் சட்டத்தின் குறிக்கோள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மகாத்மா காந்தியின் பெயரால் 100 நாள் ""குளத்து வேலைத்திட்டத்தில்'' தினமும் நிகழ்ந்துவரும் கொள்ளையை நாம் அறிவது நன்று.
இந்தத் திட்டத்தின் பெயர் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைக் காப்புறுதித் திட்டம். இத்திட்டத்தின்படி, 100 நாள்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க தினம் ரூ. 100 வழங்குதல் மூலம் அவர்களின் வாங்கும் சக்தியை உயர்த்துதல் ஆகும்.
அரசின் மிக முக்கியமான இந்தச் சமூக நலத்திட்டம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் - இன்னமும் கடைநிலை மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வளவு உயர்ந்துவிட்டது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
காரணம், இத்திட்டத்தின் பெரும்பகுதி பணம் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கே உதவுவதாக உள்ளது.
இதன் பெரும்பகுதி ஒன்றியத் தலைவர்களால் சுருட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்த மகாத்மா மகா ஊழல் திட்டம் 2006-ல் தொடங்கி இன்றுவரை இத்திட்டத்துக்காக 1.1 லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. இருப்பினும் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சுருட்டப்பட்ட பணம் 1.76 லட்சம் கோடியைவிட 75 லட்சம் கோடி ரூபாய் குறைவு என்றாலும் தொகை பெரிதுதானே. இவ்வளவு பெருந்தொகை கடந்த 5 ஆண்டுகளாகச் செலவாகிறது. ஆனால், இதற்குத் தணிக்கையே கிடையாதாம்.
மக்கள் சமூகம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்ட ஒன்றியங்கள் சமூகத் தணிக்கையை இயலாமைக்கு ஆளாக்கியுள்ளன. ஊராட்சி மன்றத் தலைவர் மூலமே பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. வந்தது எவ்வளவு? போனது எவ்வளவு? கப்பம் எவ்வளவு? கமிஷன் எவ்வளவு? என்றெல்லாம் மக்கள் பேசுவதுண்டு. யாருக்குத் தெரியும்? ஒன்றியத் தலைவர்களால் பெயரளவில் ஒரு தணிக்கைக் குழுவின் வேலை நீட்டப்பட்ட இடங்களில் ஒப்பம்போட்டு "டிக்' அடிப்பதுதானே!
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி 2007-08-ல் 130 கோடி வேலைநாள்களில் தினம் நபர் ஒருவருக்கு ரூ. 75 வழங்கியுள்ளனர். தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை எடுத்துள்ள ஒரு புள்ளிவிவரக் கணக்கின்படி 2007-08-ல் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் 8.8 கோடி வேலைநாள்களில் மட்டுமே பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சரகம் வெளியிட்டுள்ள கணக்கின்படி 975 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அறிக்கைப்படி 6.6 கோடி ரூபாய் மட்டுமே வறுமைக்கோட்டில் வாழும் மக்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதால் மீதி 969 கோடி ரூபாய் எங்கே போயிற்று? 100 நாள்கள் வேலை என்றாலும் 2009-10-ல் நிகழ்த்திய ஒரு கணக்கெடுப்பின்படி கிராமங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு 54 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் உண்டு.
இந்த மகாத்மா மகா ஊழல் திட்டம் நிஜமாகவே கடைநிலை ஏழைகளிடம் போனதா என்ற சந்தேகத்தை அடுத்து நமது கேள்வி, உருப்படி இல்லாமல் சோம்பித்திரிந்து வேலை செய்ததுபோல் பாவனை செய்ய மக்கள் பணத்தைப் பாழடிக்கலாமா? சரி இவ்வளவு பணம் செலவழித்தார்களே உருப்படியாக எதுவும் பொதுச்சொத்து உருவானதா? நல்ல கட்டுமானத்துடன் எதுவும் ஒரு பாசனக்கால்வாய் அமைத்ததாகச் சொல்ல முடியுமா?
பொதுநிலத்தில் வனம், பூங்கா என்று எதுவும் செய்தார்களா? உருப்படியாக எதுவும் சாலை அமைத்தார்களா? இதற்கெல்லாம் பதில் உண்டா? இதில் எனது சொந்த அனுபவம் ஒன்றை உதாரணத்துக்கு வைக்கிறேன்.
மாதிரி இயற்கைப்பண்ணை ஒன்றை உருவாக்கும் லட்சியத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஏக்கர் நிலம் வாங்கினேன். அந்த நிலத்துக்கு டொம்பன் குளப்பாசனம் உள்ளது என்றும், அது அயன் நஞ்சை என்றும் ஆவணம் தெரிவித்தது. ஆனால், நஞ்சை புஞ்சையாகிவிட்டது. டொம்பன் குளத்தைத் தேடி அலைந்து கண்டுபிடித்தபோது கட்சிக்காரர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆளான ஒரு திடலாக அது காட்சியளித்தது.
இந்தக் குளத்தை மீட்க 2 ஆண்டுகளாகப் போராடி, முடிவில் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் பலன் கிடைத்தது. துணை முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு வந்ததும், 10 லட்சம் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு குளத்தைத் தூர்வாரும் பணியை மகாத்மா மகா ஊழல் திட்டம் செயல்படுத்தியது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஓரளவு தூர்வாரினார்கள். ஆனால், குளத்துக்கு நீர் வரும் வரத்துக்கால்வாயைச் செப்பனிடவில்லை.
15 மாதங்கள் கடந்த பிறகும் இதில் கவனம் குறைந்துவிட்டது. நான் நேரில் பலதடவை சென்று இக்குளத்து வேலை நடக்கும் லட்சணத்தைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன். சுமார் 11 மணி அளவில்தான் பெண்கள் வேலைக்கு வருவார்கள். ஒரு நபர், வந்தவர்கள் வராதவர்கள் என்று பதிவு செய்வார். பின்னர் டீ, வடை. 12 மணிக்கு வேலையைத் தொடங்குவர். 50 பேர் வேலை செய்வார்கள்.
150 பேர் வேலை செய்ததாகக் கணக்கு எழுதினால்கூட யார் கேட்கப் போகிறார்கள்? பகல் 1 மணிக்கு வேலை நிறுத்தப்பட்டு சாப்பிடச் சென்றுவிட்டு 3 மணிக்குத் திரும்புவார்கள். 1 மணி நேரம் வேலை செய்யலாம். 4 மணிக்குப் புறப்பட்டு விடுவார்கள். வேலைக்கு வரும் 50 பெண்களில் 15 பாட்டிமார்கள் வந்ததாகக் கணக்குக்கொடுத்து விட்டுத் துண்டை விரித்துப்போட்டு மரத்தடியில் தூங்கிவிட்டுச் செல்வதுண்டு. வேலை நடக்கும் இடத்துக்கு ஒன்றிய - ஊராட்சித் தலைவர்கள் வருவது இல்லை. அபூர்வமாக எழுத்தர் வருவார். விசாரித்ததில் நீர்வரத்துக் கால்வாயைச் செப்பனிட ஜே.சி.பி. வேண்டும். அதுக்கு வழிவகை இல்லை என்பார். நானும் தண்ணீர் வரும்போது வரட்டும் என்று போராடுவதையும் மல்லுக்கட்டுவதையும் விட்டுவிட்டேன்.
மகாத்மா மகா ஊழல் திட்டத்தால் மானம் இழந்தது விவசாயம். விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆள்கள் இல்லாததால் விவசாய வேலைகளுக்கு ஏராளமாக இயந்திரங்கள் வந்துவிட்டன. டிராக்டர், டில்லர் தவிர, நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம், விதைக்கும் இயந்திரம் அறிமுகமாகி ஓரளவுக்கு ஆள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டாலும் சில பணிகளுக்கு மனித உழைப்பு வேண்டும்.
இப்போதுள்ள கேள்வி மகாத்மா மகா ஊழல் திட்டத்துக்கு மட்டும் இயந்திரத்தை அனுமதிக்காதது ஏன்? ""கள் குடிக்கக் கூடாது, ஆனால், டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் குடிப்பது தவறில்லை'' என்பதுபோல் விவசாயத்தில் இயந்திரம் வரலாம். குளத்து வேலைக்கு இயந்திரம் கூடாது என்பதில் லாஜிக்கே இல்லை.
உழைக்காமல் வேலை செய்வதுபோல் பாவனை செய்யும் சோம்பேறிகளுக்கு மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்வது நியாயமா? பொதுநல வழக்குப்போட வழிவகை உள்ளது. இரண்டாவது கேள்வி, 100 நாள் வேலைத்திட்டம் என்றால் ஏரி, குள மராமத்து தவிர, வேறு வேலைகளே இல்லையா?
பெண்களுக்குச் சொந்தமாகத் தொழில் நடத்தும்படி தையல், நெசவு, எம்ப்ராய்டரி, லேத்துப்பட்டறை, எலக்ட்ரீஷியன், மின்சார மோட்டார் பழுதுபார்த்தல், மரக்கன்று நர்சரி, ஓட்டுநர், தச்சு வேலை என்று எவ்வளவோ கிராமத் தொழில்களுக்குரிய பயிற்சி பெற இதே பணத்தை வழங்கி மக்களின் சோம்பலைப் போக்கலாமே. சோம்பேறிகளுக்கு ஊக்கம் தரும் மகாத்மா மகா ஊழல் திட்டம் இதேபோக்கில் செயல்பட்டால் இந்தியா எப்படி வல்லரசாகும்?
மகாத்மா மகா ஊழல் திட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் சுவிஸ் வங்கிக்குச் செல்லவில்லை. உள்ளூரில் ஊராட்சித் தலைவர்களும், வட்டார அளவில் ஒன்றியத் தலைவர்களும் கடந்த ஐந்தாண்டில் சேர்த்துள்ள சொத்து மதிப்பிலிருந்து சொகுசு வீடுகள், மனைக்கட்டுகள், நிலம் ஆகியவற்றிலிருந்து ஊகித்துவிடலாம். இப்போது உடனடியான தேவை இந்த மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் செலவான பணம் குறித்து மத்திய அரசின் தணிக்கைக்குழு தணிக்கை செய்து அறிக்கை தர வேண்டும்.
இரண்டாவதாக, மகாத்மா காந்தி கண்ட கிராம ராஜ்ஜியக் கொள்கையைப் பலப்படுத்தும் விதத்தில் வேளாண்மை மேம்பாட்டுக்கும், கிராமக் கைத்தொழில் மேம்பாட்டுக்கும் இதே பணத்தை உருப்படியாகச் செலவழிக்க வழிகாணுதல் நலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...