முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

குடி கெடுக்கும் குடி வருமானம்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு'' என்று பாடிய கண்ணதாசனின் கவிதையைத் தவறாகப் புரிந்துகொண்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கைத் தோற்றுவித்துவிட்டது. மதுவைக் குடித்துக் குடித்து ஈரலை இழந்து இறப்பவர் ஒருபக்கம்.  

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:38 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு'' என்று பாடிய கண்ணதாசனின் கவிதையைத் தவறாகப் புரிந்துகொண்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கைத் தோற்றுவித்துவிட்டது. மதுவைக் குடித்துக் குடித்து ஈரலை இழந்து இறப்பவர் ஒருபக்கம்.

 மாநிலந்தோறும் விஷம் கலந்த கள்ளச்சாராயம் பருகி நினைவே திரும்பாமல் இறப்பவர் பாதி, அதனால்தான் ""மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் என்று இறைவன்மீதும் அவதூறு செய்கிறான் கவிஞன். போகட்டும் குடிகெடுக்கும் குடிவருமானம் என்ற இன்றைய விவாதத்தில் இதனால் சமூகத்துக்கு நன்மை உண்டா? என்ற கேள்வியுடன் தொடர்வோம்.

 நோக்கம் என்னவோ குடிப்பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதுதான். மதுவிற்பனையில் முறைகேடுகள் அதிகமாகிவிட்டது என்பதால் மது புட்டிக்கு கூடுதல் வரி விதித்தும், மதுவிற்பனையில் அரசு ஏகபோகத்தையும் புகுத்தினார்கள். எவ்வளவு விலை உயர்ந்தாலும் குடிபெருகியதே தவிர, குறையவில்லை. நாளடைவில் குடியைக் குறைக்கும் திட்டம் குடியைப் பெருக்கும் திட்டமாக மாறியது.

 இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான எக்சைஸ் வரி திரட்டப்படுகிறது. எக்சைஸ்வரி என்பது மதுபானம், ஆல்கஹால், பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்துகளுக்கு நிகரவிலைக்குமேல் விதிக்கப்படும் வரி. இவற்றில் மதுபாட்டிலின் பங்குமட்டும் 99.5 சதவிகிதம்.

 தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாடிபிடித்துப் பார்த்தால் ஜி.டி.பி என்று சொல்லப்படும் மொத்த தேச வருமான மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 8.2 சதவிகிதம். மக்கள்தொகையின் பங்கு 6.06 சதவிகிதம்.

 அதேசமயம் இந்தியாவின் மொத்த எக்சைஸ் வரி வருமானத்தில் தமிழ்நாட்டின் பங்கு 13.58 சதவிகிதம். அதாவது குடியே வாழ்வு, குடியே சாவு. அதுவே தமிழ்நாடு.

 தமிழ்நாட்டின் சிறப்பு எதுவெனில், எக்சைஸ் வரிக்கு மேல் மதுவுக்கு விற்பனை வரி இரண்டு நிலைகளில் வசூலாகிறது. முதல்நிலை விற்பனை மூலம் ஆண்டுக்கு 6125.48 கோடி ரூபாய் வசூல், இரண்டாம் நிலை விற்பனை மூலம் 12415.09 கோடி ரூபாய் வசூல். இந்தத் தொகையுடன் எக்சைஸ் வரி 7508.19 கோடியையும் சேர்த்தால் மதுபான வரி வருமானம் 26048.75 கோடியாகும். தமிழ்நாட்டுக்கு மொத்தவரிகள், மத்திய அரசுப்பங்கு எல்லாம் சேர்த்து 46,063 கோடியில் மதுபான உற்பத்தி நுகர்வால் மட்டும் 56 சதவிகித வருமானம் உள்ளது. இதன் பொருள் மக்கள் மட்டுமல்ல "மாநிலமே மதுக்கோப்பையில் குடியேறியுள்ளது.

 தமிழ்நாடு மது நாடாக இல்லாமல் பரிபூர்ண மதுவிலக்கு நிலவிய முன்னொரு காலத்தில் ராஜாஜி, காமராஜர் போன்றோர் முதலமைச்சர்களாக இருந்தபோது எவ்வளவோ நல்ல நல்ல உதாரணங்கள் இருந்தன. அவை இதர மாநிலங்களுக்கும் பரவின. இந்தியாவிலேயே முதல்முறையாக 1953-ல் குத்தகையாளர் - குடிவார உரிமைச் சட்டத்தை இயற்றிய பெருமை ராஜாஜியைச் சாரும்.

 பிற்காலத்தில் சுதந்திராக் கட்சியைத் தோற்றுவித்த அதே ராஜாஜிதான் சோஷலிசத்தின் திறவு கோலாக மதிக்க வேண்டிய குத்தகை உரிமைச்சட்டத்தை இயற்றித் தமிழ்நாட்டின் நிலப்பிரபுக்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்துக் கொண்டார்.

 தமிழ்நாட்டைப் பின்பற்றி வடமாநிலங்களிலும் நிலஉரிமையில் குத்தகையாளர்

 பாதுகாப்புச் சட்டம் பல ஆண்டுகள் கழித்து இயற்றப்பட்டன. பின்னர், பதவியேற்ற காமராஜர் குத்தகையாளர் பங்கை 40 சதவிகிதத்திலிருந்து 50 ஆக உயர்த்தியதுடன் ஒவ்வொரு கிராமங்களிலும் ஆரம்பக்கல்விக்கான பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தார். மதியஉணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். மதியஉணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார். எம்.ஜி.ஆருக்குப் பின்னரே இதர மாநிலங்களில் மாணவர்களுக்கு மதியஉணவுத் திட்டம் பரவியது.

 இப்படிப்பட்ட நல்ல உதாரணங்களுக்கு வித்திட்ட அதே தமிழ்நாடுதான் பல கெட்ட உதாரணங்களுக்கும் வித்திட்டது. யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி விஞ்ஞான ரீதியாக ஊழல்களை உருவாக்கிய தி.மு.க. மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியது. அரசாங்கத்தின் ஒவ்வொரு பதவிகளுக்கும் விலை வைத்தது. வைக்கப்பட்ட விலையை ஒன்றியத்தலைவரும், அமைச்சரும் பங்கு பிரித்துக்கொண்டனர். கஜானாவைக் கொள்ளையடிக்க மேல்மட்ட அதிகாரிகள் - அமைச்சர்கள் கூட்டணி உருவாகி ஊழல்களில் புதிய எல்லைகளைத் தொட்டனர். இப்படிப்பட்ட கூட்டணி பின்னர் இதர மாநிலங்களுக்கும் பரவியது. மாநிலத்தில் மட்டுமல்லாது அன்று மத்திய அரசிலும் அமைச்சராயிருந்த தமிழர் 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள தொகை ஒன்றுக்குப்பின் பதின்மூன்று பூஜ்யங்கள் கோடி. இப்படிப்பட்ட மோசமான முன்னுதாரணங்களால் கவர்ச்சியுற்ற இதர மாநிலங்களிலும் கூட்டணி ஊழல்கள் இப்போது உச்சகட்டத்தில் உள்ளன. இன்று தமிழ்நாட்டைப் பின்பற்றி மதுவிற்பனையை மாநில ஏகபோகமாகப் பல மாநிலங்கள் அரசுடைமையாக்கி அரசு வருமானத்தை எக்சைஸ் வரிக்கு மேல் மதுப்புட்டி விற்பனை வரி மூலம் பெற்ற பணத்தைச் சமூக நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த முன்வந்துவிட்டன.

 குஜராத் மட்டுமே இதில் விதிவிலக்கு. பல்வேறு மாநிலச் செலவினங்களை குஜராத் எப்படிச் சமாளிக்கிறது? நிலப்பரப்பு அடிப்படையில் குஜராத்தும் தமிழ்நாடும் ஏறத்தாழ ஒரே அளவுதான். எனினும், பாலைவனம், மலை, குகை, வனம் என்று நிலப்பரப்பு அதிகம் உள்ளதால் வாழ்விடங்கள் தமிழ்நாட்டைவிடக் குறைவு. மக்கள்தொகையும் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டால் குறைவாயிருக்கலாம். ஆகவே வரவு - செலவுத் திட்டமும் கால்பங்கு குறைவுதான். மதுபானத்துக்கு குஜராத்தில் எக்சைஸ் வரி வசூல் 3,237.36 கோடி. தமிழ்நாட்டு வசூலில் 40% மதுவிற்பனையை அரசு ஏற்று நடத்தாததால் விற்பனைவரி பூஜ்யம். ஒட்டுமொத்த மதுகுடி வருமானம் தமிழ்நாட்டில் 26048.75 கோடியுடன் ஒப்பிட்டால் 15% கூடத்தேறாது. எனினும், வரிசாரா மாநில வருமானம் தமிழ்நாட்டில் 16,167.01 கோடி என்றால் அதுவே குஜராத்தில் 16418.01 கோடி ரூபாய் மற்றும் குஜராத்தில் சமூகநலத் திட்டத்துக்கான செலவினம் மாநில ஜி.டி.பி.யில் 5.83 சதவிகிதம். அதுவே தமிழ்நாட்டில் 2.67 சதவிகிதம்.

 தமிழ்நாட்டைவிடச் சிறிய மாநிலமான குஜராத்தில் குடிகெடுக்கும் குடிவருமானத்தைக் கொண்டு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தவில்லை.

 தமிழ்நாட்டில் குடி வருமானமே பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால், இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும், மதுவை மையமாக வைக்காமல் வேறுவழியில் மாநில வருமானத்தை உயர்த்தத் திட்டமிடலாம். மது எவ்வாறு உடல் நலத்தைக் கெடுக்கிறதோ, அதுபோலவே பாக்கெட்டுகளில் கிட்டும் பல்வேறு ஃபாஸ்ட்புட்களும் உடல்நலத்தைக் கெடுப்பதால் அதிகவரி விதிக்கலாம்.

 சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பும் பெண்கள் வேலைக்குச் சென்றார்கள். காலையில் எழுந்து சுமார் 1 மணி நேரமாவது சமையல் அறையில் வேலை செய்வதுண்டு. சில்வர் பாக்சில் உப்புமா, புளிசாதம், தயிர்சாதம், இட்லி, ஊத்தப்பம் என்று எதுவும் எடுத்து வருவதுண்டு. இப்போதெல்லாம் அப்படி இல்லை, என்னென்னவோ புதிய புதிய பெயர்களில் பீட்சாவாம், பாஸ்தாவாம், பல்வேறு நூடுல்கள், வாகர், பாகர் என்று பல கீரீம் போட்ட பன் அயிட்டம் பற்பல. இவற்றில் ஏராளமாக ரசாயனங்களும் உள்ளன. ஹாட்டாக், கோல்ட்பிக் என்று நான்வெஜ் அயிட்டங்களும் உண்டு.

 கோதுமை மாவு சற்று பழுப்பாயிருக்கும். அதை பிளீச் செய்து மைதா மாவு வெள்ளையாக்கப்படுகிறது. இந்த பிளீச் செய்யப்பட்ட மைதா மாவுதான் பல்வேறு பாக்கெட் புட்டுக்கு அடிப்படை. வேலைக்குச் செல்லும் பெண்களும் ஆண்களும் வீட்டில் சமைப்பதுவே அபூர்வம். சுகாதாரமான உணவு என்று சொல்லப்படும் சுகாதாரமற்ற உணவை அன்றாடம் உள்ளே தள்ளுகின்றனர். மேகி என்பது ரசாயனமிட்ட மக்காச்சோள அவல்.

 இதைவிட நெல்லில் இடித்த சிவப்பு அவலும் கடையில் மலிவாக இருக்கும். அவலை ஐந்து நிமிஷம் வெந்நீரில் ஊறவைத்தால் நல்ல ஃபாஸ்ட்ஃபுட் ரெடி. சிறிது எலுமிச்சம் பழம் பிழிந்து அல்லது தயிர் கலந்து உள்ளே தள்ளலாமே! உளுந்தங்களி, கேப்பைக்களி, கம்புக்களி என்று பல நல்லுணவுகள் உள்ளனவே.

 பன்னாட்டு நிறுவனங்களின் பல்வேறு தயாரிப்புகளான பெப்சி, கோகோ கோலா, பிரிட்டானியா பிஸ்கட், பூஸ்ட், சாக்லேட்டுகள், காம்பிளான், ஹார்லிக்ஸ் ஆகிய அயிட்டங்களுக்கும் கூடுதல் வரி விதிக்கலாம். மெல்ல, மெல்ல மது விற்பனையை அரசு கைவிடுதல் நன்று.

 இன்று நாமெல்லாம் மறந்துவிட்ட தேசியக்கவிஞர் தேசிக வினாயகம் பிள்ளை உமர் கையாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தபோது "மது'வை "அமுதாக' மாற்றியுள்ளதை நினைவுகொள்ளலாம். உமர் கையாமின் புகழ் பெற்ற கவிதையைப் பிள்ளை அவர்கள்:

 ""வெய்யிற்கேற்ற நிழலுண்டு

 வீசுந்தென்றல் காற்றுண்டு

 கையில் கம்பன் கவிஉண்டு

 கலசம் நிறைய அமுதுண்டு''

 என்று எழுதி, மதுவிலக்கை ஆதரித்ததை நினைவில்கொண்டு, குடி கெடுக்கும் குடி வருமானம் தமிழனுக்கு வேண்டாம் என்று அரசு முடிவு எடுப்பது நன்றாயிருக்கும். டாஸ்மாக் கடைகளை மூடுவதன் மூலம் தமிழன் பெருமை கொள்வான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.