ரங்கு செளர்யா...
டார்ஜிலிங்கின் பானிகட்டா டீ எஸ்டேட்டில் பிறந்த சாதாரணப் பெண்.
இன்று இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளை ஒட்டிய நேபாளப் பகுதிகளில் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் கேடு கெட்ட சதை வியாபார டான்கள் பலருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.
உலகத்தின் பார்வையில் அஸ்ஸாமின் டார்ஜிலிங் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பேரழகு மலை வாசஸ்தலமாக இருக்கலாம். ஏனெனில் அங்கே தானிருக்கிறது இமயத்தின் கஞ்சன் ஜங்கா சிகரம். அந்தப் புனிதமான மலைச்சிகரத்தின் பேரமைதிக்குச் சற்றும் பொருந்தா வண்ணம் அங்கு தான் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் இந்தியாவிலேயே அதிக அளவில் கடத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். பரவலாகப் பலருக்கும் தெரிந்திராத உண்மை அங்கிருந்து தான் உலகின் பல பகுதிகளுக்கும் இளம்பெண்கள் மற்றும் 13 வயதுகுட்பட்ட சிறுமிகளை (பல சமயங்களில் சிறுவர்களையும் கூடத்தான்) சப்ளை செய்யும் பாலியல் அடிமை வியாபாரம் துவங்குகிறது என்பது!.
இந்தியக் குழந்தைகளை மையமாக வைத்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் மிக வலுவான நெட்வொர்க்குடன் கொலைக்கு அஞ்சாத படுபாதகர்களின் மேற்பார்வையில் இத்தொழில் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களது வேலை இந்தியக் கிராமங்கள், மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து கடத்தப்படும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை (சிறுவர்கள்) மொத்தமாக ஓரிடத்தில் அடைத்து வைத்து அவர்களை போதை மருந்துகளுக்குப் பழக்கி, அவர்கள் மயங்கி இருக்கும் தருணத்தில் அவர்களை ஒரே நாளில் தொடர்ந்து 20 முறைகளுக்கும் மேலாக பாலியல் வல்லுறவில் ஈடுபட வைத்து பின்பு வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும், வேறு பல நாடுகளுக்கும் பாலியல் அடிமைகளாக பெருந்தொகைக்கு விற்று விடுவது தான்.
இம்மாதிரியான கொடுமைகளைத் தடுத்து நிறுத்த இந்தியா முழுவதும் இன்று பல தன்னார்வலர்கள் மற்றும் சமூகப் போராளிகள் இருந்தாலும் கூட ரங்கு செளர்யா போன்றவர்கள் மிகத் தீரமானவர்கள். ஏனெனில் ரங்கு செளர்யாவுக்கு, இந்தியச் சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் விஷயத்தில் அவர் முன்னெடுத்த சேவைப் பணிகளுக்காக தினமும் கொலை மிரட்டல்கள் வராத நாட்களே இல்லை எனலாம். இதுவரையிலும் அவரது சேவைகளை நிறுத்தச் சொல்லி அவர் பலரால் பல சந்தர்பங்களில் கடுமையான மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கிறார். சாம, பேத, தான, தண்டம் என்று சொல்லப்படக் கூடிய நால்வகை முறைகளிலும் அவர் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார். சதை வியாபாரத்தை மாபெரும் நெட்வொர்க்குடன் நடத்தி வரும் பல கோடீஸ்வர தாதாக்கள் பெரும்தொகை கொடுத்து ரங்குவை விலைக்கு வாங்கப் பார்த்தனர். ஆனால் ரங்கு எதற்காகவும் மசியவுமில்லை. இளம் சிறுமிகள் பாதுகாப்பு விஷயத்தில் தான் முன்னெடுத்து வைத்த காலை அதன் பின் எப்போதும் பின்னெடுக்கவும் இல்லை.
முதன் முதலாக டெல்லியில் ஒரு தொழிலதிபரின் வீட்டில் டார்ஜிலிங்கில் இருந்து கடத்தி விற்கப்பட்டு கொத்தடிமையாக மாட்டிக் கொண்ட ஒரு சிறுமியை வெற்றிகரமாக மீட்டது தான் ரங்குவின் துவக்கம். அதன் பின்னர் இன்று வரை அவர் மீட்ட பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் எண்ணிக்கை 20, 000 தாண்டும். பாலியல் அடிமைகளாக்கப் பட்டு விற்கப்படும் குழந்தைகளை மீட்பதில் முழு மூச்சாக இறங்கும் முன் ரங்கு நேபாளம், காத்மண்டு சென்று அங்கே அனுராதா கொய்ராலா நடத்தி வந்த மைத்தி நேபாள் எனும் தன்னார்வ அமைப்பின் மூலமாகத் தீவிரப் பயிற்சி எடுத்துக் கொண்டார். அங்கே முறையான பயிற்சி பெற்ற பின் டார்ஜிலிங் திரும்பி ‘கஞ்சன் ஜங்கா உத்தர் கேந்திரா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை டெல்லி, பாட்னா, மும்பை, கொல்கத்தா, நேபாள எல்லைப்பகுதிகள் எனப் பல இடங்களில் இருந்தும் பல்வேறு பெண் குழந்தைகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடத்திச் செல்லப்படும் சிறுமிகள் பெரும்பாலும் பாலியல் அடிமைகளாகவே ஆக்கப்படுகின்றனர். வெகு சிலரே பெரும்பணக்கார வீடுகளில் வாழ்நாள் கொத்தடிமைகளாக விற்கப்படுகின்றனர். சிலர் பிச்சையெடுக்க வைக்கப் படுகிறார்கள். இவர்களில் சிலர் அந்நிய நாட்டு சட்ட விரோத மருந்துக் கம்பெனிகளிடம் சோதனை எலிகளாகவும் விற்கப்படுகின்றனர். இம்மாதிரியான துர் சோதனைகள் நம்மை அணுகாது என்பதே இந்தியாவில் பலரது அனுமானமாக இருக்கிறது. ஆனால் அது அப்படி இல்லை. கடத்தப்பட்டு விற்கப்பட்ட குழந்தைகளில் பணம் படைத்தவர்களது வீட்டுச் சிறுமிகளும், இளம்பெண்களும் உண்டு. குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதின் அவசியத்தை இந்தியப் பெற்றோர் சரி வர கற்றுத் தராதது இம்மாதிரியான கடத்தல்களுக்கு ஒரு காரணம் எனில் மற்றொரு மிகப்பெரிய காரணம் இந்தியாவின் வடகிழக்கு மாகாணப் பகுதிகளில் காணப்படும் மாபெரும் டீ எஸ்டேட் புதர்கள். பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் விரிந்து பரந்திருக்கும் இந்த எஸ்டேட் பகுதிகள் கடத்தல்காரர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவனவாக இருக்கின்றன.
ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் தவற விடப்படும் குழந்தைகள், பெற்றோரின் அஜாக்கிரதை, பின் தொடர்தல், தனிப்பட்ட விரோதங்களுக்காக திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டுக் கடத்துதல் எனப் பல்வேறு விதங்களில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக கடத்தப் படுகிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த வியாபாரத்தை சர்வ தேச அளவில் செய்து வரும் பயங்கரவாதிகளின் நெட் வொர்க் மிக விசாலமானது. அவர்களது வியாபாரத்தில் கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியருக்கும் உண்டு. ஆனால் நம்மில் பலரிடம் வேடிக்கை பார்க்கும் குணம் தான் அதிகமாக உள்ளதே தவிர ரங்கு செளர்யா போல எத்தனை தடை வரினும், மிரட்டல்களுக்குப் பணியாது இறங்கி வேலை செய்து தைரிய லட்சுமிகளாக தங்களை நிலை நிறுத்தும் தீரம் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.
அதனால் தான் ரங்கு செளர்யா போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல அரசின் விருதுகளுக்கும் உரியவர்கள் ஆகிறார்கள்.
ரங்கு செளர்யா இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை மீட்டெடுக்கும் விஷயத்தில் தனது தீரமான பங்கெடுப்புகளுக்காக இதுவரை பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- 2011 ஆம் ஆண்டில் இவரது சமூக சேவைப் பணிக்காக காட்ஃபிரே நேஷனல் பிரேவரி அவார்ட் வழங்கப்பட்டது.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற விஷயத்தில் வித்யாசமான பங்களிப்புகளை வழங்கி வரும் 100 சிறந்த பெண்களில் ஒருவராக 2009 ஆம் ஆண்டுக்கான ‘பெண் சாதனையாளர் விருது’!
- லாப நோக்கற்ற தன்னார்வ தொண்டு அமைப்பான கஞ்சன் ஜங்கா உத்தர் கேந்திரா செயல்பாட்டுக்காக 20 பிராந்திய தன்னார்வ சேவை அமைப்புகள் வழங்கிய தனிப்பட்ட சேவை விருதுகள்.
- 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் சார்பாக 100 சிறந்த சமூகப் போராளிகளில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் கரங்களால் பெறப்பட்ட ‘இந்தியாவின் 100 சிறந்த பெண் சாதனையாளர்களில் ஒருவர்’ எனும் விருது உட்பட ரங்கு பெற்ற விருதுகள் அனேகம்.
ரங்கு செளர்யாவைப் போன்றவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களைப் போல உயிரைப் பணயம் வைத்து தீரச் செயல் புரிந்து பாலியல் அடிமைகளாக்கப் படும் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் கூட நம் கவனத்துக்கு வரும் அல்லது நம் பார்வையில் படும் அநீதிகளையேனும் தட்டிக் கேட்கும் உணர்வு நமக்கு வர வேண்டும். யாருக்கோ... என்னவோ வந்தால் நமக்கென்ன என்று நம் காலடியில் வெள்ளம் வரும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனப்போக்கு நிச்சயம் ஆபத்தானது. அதை உணர்வதற்காகவேனும் நாம் ரங்கு செளர்யாவைப் பற்றி அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.
ரங்கு செளர்யா போலவே நமது அண்டை மாநிலமான தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடத்தப் பட்டு மீட்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களுக்காக 'பிரஜ்வாலா' என்ற தன்னார்வ சேவை மையத்தை நடத்தி வருகிறார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


