ஐந்து வயதிலிருந்து இசைப் பயிற்சி பெற்று இளம் வயதிலேயே பாடகி, இசை தொகுப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் எஸ்.ஜே.ஜனனி. கர்நாடக, இந்துஸ்தானி, பஜன் என இசையில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவி. இவர் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளை பாடியுள்ளார்.
இவரது இசைப்பணியை பாராட்டி இளமணி விருது, தேசிய விருது, தமிழக அரசு விருது, கலைமாமணி விருது என பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. எஸ்.ஜே.ஜனனி. தற்போது இவரே இசையமைத்து பாடிய, 'புதிய உலகம் மலரட்டுமே' என்கிறப் பாடலுக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் க்ளோபல் பீஸ் சாங்' விருதுகள்” அமைப்பு 'உலக அமைதிப் பாடல்' விருதினை வழங்கியுள்ளது.
அமைதியை பரப்பும் விதமாக நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்ள உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் பங்குபெற்றன. அதில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட, பகிரப்பட்ட பாடல் என்கிற அடிப்படையில் இந்தப்பாடல் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
மேலும், கலிபோர்னியாவில் உள்ள 'ப்ராஜக்ட பீஸ் ஆன் எர்த்' என்கிற அமைப்பு இவரை உலக அமைதி இசை தூதுவர்களில் ஒருவராகவும் அந்த அமைப்பின் ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும் நியமித்துள்ளது.
பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழக மாணவியான ஜனனிக்கு தற்போது விருது பெற்றுத்தந்துள்ள இந்தப்பாடல், பிரம்ம குமாரிகளை பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. 'இந்த விருதை பெறுவதற்கு என் குடும்பத்தார், எனக்கு இசை கற்றுத் தந்த ஆசிரியர்களும்தான் காரணம். இந்த விருது அவர்களுக்கானது' என்கிறார் ஜனனி.
-விஷ்ணு