இணையதளத்தில் தங்களுக்கான சேவையை வழங்கும் செயலி அல்லது இணைய நிறுவனத்தைத் தேர்வு செய்வதில் எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்கக் கூடாது, இணைய சமநிலை பாதிக்கப்படக் கூடாது என்பது நுகர்வோரின் பரவலான கோரிக்கை. அதே அடிப்படையில் இணைய வணிக சமநிலையைத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தற்போது வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. தற்போது வாட்ஸ்அப், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் வழங்கும் இலவச சேவைகளை முறைப்படுத்தும் நடவடிக்கையை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.
தொலைபேசி அல்லது செல்லிடப்பேசியில் பேசுவதற்கு நுகர்வோர் செலுத்தும் கட்டணம் மூலமாகத்தான், பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த தனியார் இந்திய தொலைபேசி நிறுவனங்கள் கணிசமான வருவாய் பெறுகின்றன. இந்தியாவில் ஸ்மார்ட் போன் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், இந்த வருவாய் குறையத் தொடங்கிவிட்டது. அயல்நாட்டு தொலைத் தொடர்பு வர்த்தகம் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல, உள்நாட்டுத் தொலைத் தொடர்பு வருவாய்க்கும் பங்கம் ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரில் 83 விழுக்காட்டினர் ஸ்மார்ட் போன் மூலமாகவே செயல்படுகின்றனர். நிகழாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை 11.8 கோடியாக இருக்கும் என்று சந்தை புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. 2017-ஆம் ஆண்டில் அமெரிக்காவை அடுத்து இந்தியாதான் ஸ்மார்ட் போன்களின் மிகப் பெரிய சந்தையாக இருக்கும்.
நவீன தொழில்நுட்பம் இளையோருக்கு மிகவும் எளிதானதாக இருக்கிறது. 25% இளைஞர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறை சமூக வலைதளங்களைத் திறந்துப் பார்க்கிறார்கள். 8 வயது முதல் 18 வயது வரையிலான வளர்இளம் பருவத்தினர் ஒரு நாளைக்கு 10 மணி 45 நிமிடங்களை இணையம், சமூக வலைதளங்களில் செலவிடுகிறார்கள்.
இப்படியான நிலைமை இருந்தும், மிக அதிகமான தொகைக்கு ஏலம் எடுத்திருக்கும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முதலீட்டுக்கு ஏற்ற லாபம் அடைவதில்லை. ஏனென்றால், செயலிகள் மூலமாகத் தகவல்களை பக்கம் பக்கமாக இலவசமாக அனுப்பவும், காட்சித் தொகுப்புகளையும், குரல் பதிவுகளையும் நுகர்வோர் பரிமாறிக் கொள்ளவும் தொடங்கிவிட்டதுதான். செயலிகள் மூலமாக மட்டுமே செயல்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், ஸ்கைப், லிங்க்டுஇன், இ-பே, டிராப்பாக்ஸ் என பத்துக்கும் மேற்பட்ட செயலிகள் இருக்கின்றன. இதில் 52% நுகர்வோர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் 42%, ஸ்கைப் 37%. செயலிகள் பயன்பாட்டுக்காக அதிகபட்சம் 4 பைசா என்கிற அளவில்தான் செலவிடக் கூடும். இதனால், உள்நாட்டு தொலைத் தொடர்பு வருவாய் கணிசமாகவே குறையத் தொடங்கியிருக்கிறது. அதனால்தான், செயலிகளின் இலவச சேவையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கையாக இருக்கிறது. இவ்வாறு செயலிகளின் சேவைக்குக் கட்டணம் விதிக்கப்பட்டு, அந்தக் கட்டணம் தங்களுக்கு இணையாக இருந்தால் மட்டுமே வணிகத்தில் சமநிலை கிடைக்கும் என்பது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாதம்.
செயலிகள் வழங்கும் சேவையை முறைப்படுத்தி, கட்டண வளையத்துக்குள் கொண்டு வந்தாலும்கூட, தொலைபேசி நிறுவனங்கள் தொழில் போட்டிக்காக தங்களது கட்டணத்தை மேலும் குறைக்க வேண்டியதிருக்கும். அதனால், செயலிகளின் இலவச சேவைக்குக் கட்டுப்பாடு விதிக்கும்போது வழக்கமான தொலைத் தொடர்பு சேவைகளின் கட்டணங்களும் குறையும் என எதிர்பார்க்கலாம்.
மற்ற நாடுகளில் செயலிகள் பயன்பாட்டுக்கு, ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்துவதாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக நுகர்வோரிடமிருந்து ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலும் அத்தகைய நடைமுறையைக் கொண்டு வரலாம். அது செயலிகளைப் பயன்படுத்துவோருக்கு மிகவும் வசதியாக அமையும். அல்லது, செயலிகளின் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து, செயலிகளை நடத்துவோர் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களுக்குக் கட்டணமாக செலுத்தும் நடைமுறையையும் கையாளலாம்.
சீனாவில் சமூக வலைதளங்கள் சிக்கலாக உருவெடுத்தபோது அந்த நாடு, ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றுக்கு இணையாகத் தனக்கான உள்ளூர் செயலிகளை உருவாக்கிக் கொண்டது. இணைய தளங்களையும் அமைத்துக் கொண்டது. இத்தகைய சமூக வலைதளங்களில், இணையதளங்களில் விளம்பர வருவாயும் கிடைத்தது. ஆனால், இந்தியா ஜனநாயக நாடு. ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றைத் தடை செய்ய முடியாது. நமக்கென்று செயலியையும் இணையதளத்தையும் அமைத்துக் கொண்டாலும் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றுடன் வர்த்தக ரீதியாக போட்டியிட நேரும்.
அலைக்கற்றையை பல கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டு வருவாய் சம்பாதிக்கும் அரசு, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த நிறுவனங்களில் பங்குகளாக மக்களின் சேமிப்பும், அரசு வங்கிகளிலிருந்து தரப்பட்டிருக்கும் கடன்களும் உள்ள நிலையில், அவை திவாலானால் நஷ்டம் பொதுமக்களுக்குத்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால், செயலிகளுக்கு சிறு அளவில் ஆண்டுக் கட்டணம் நிர்ணயிப்பதில் தவறில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன்னம்பிக்கை உயர காரணம் தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

