தலித் விரோத மனப்பான்மை கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை (தடை) சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் மூலம், எஸ்.சி., எஸ்.டி. சட்டம் நீர்த்து போக செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி, நாடு முழுவதும் தலித் அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் தலித் அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை பாரத் பந்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, தில்லியின் ஜந்தர்மந்தர் பகுதியில் தலித் அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது:
பாஜக ஆட்சியில் ஒவ்வொரு சம்பவமும் உள்நோக்கத்துடனேயே நடக்கின்றன. தலித்துகளுக்கு பிரதமர் மோடியின் மனதில் இடமில்லை. அப்படி அவரின் மனதில் இடமிருந்தால், தலித்துகள் தொடர்பான மத்திய அரசின் கொள்கைகள் வேறு மாதிரி உருவாக்கப்பட்டிருக்கும். குஜராத்தில் தனது உரைகள் குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில், தலித்துகள் ஆன்மிக ரீதியில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார். இந்த வரிகளில் இருந்து தலித்துகளை பற்றி பிரதமர் மோடி என்ன நினைக்கிறார், தலித்துகள் தொடர்பான அவர் என்ன கொள்கையை கடைப்பிடிக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
கல்வியிலும், நாட்டின் வளர்ச்சியிலும் தலித்துகளுக்கு இடம் கொடுக்கப்படுவதை பிரதமர் மோடியும், பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனை தலித் விரோதமாக இருக்கிறது. அவர்களை ஒடுக்கவே மோடி நினைக்கிறார். இதை நாடு முழுவதும் உள்ள தலித்துகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் புரிந்து வைத்துள்ளனர். இந்த காரணத்துக்காகத்தான், அவர்களை (மத்திய அரசு, பாஜக) காங்கிரஸ் எதிர்க்கிறது.
வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும். இதையடுத்து, மத்தியில் தலித்துகள், ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் நலன்களை விரும்பும் அரசு அமையும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடை சட்டத்தை காங்கிரஸ் கட்சியும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுமே கொண்டு வந்தனர். அதனால் அந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி, பிறருடன் சேர்ந்து பாதுகாக்கும். அந்த சட்டத்தின் மீது தற்போது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலை தொடுத்த நீதிபதிக்கு, மத்திய அரசு பதவி உயர்வும் அளித்துள்ளது (எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி கோயல், ஓய்வுக்குப் பின் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை குறிப்பிட்டார்).
பாஜகவின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தலித்துகள் வெளிப்படையாக தாக்கப்படுகின்றனர். அவர்களை ஒடுக்கும் பணியும் வெளிப்படையாகவே நடக்கிறது. இத்தகைய இந்தியாவை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. தலித்துகள், ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சமமாக வாழும் இந்தியாவையே காங்கிரஸ் விரும்புகிறது. இதுபோன்ற இந்தியாவுக்காகவே காங்கிரஸ் போராடுகிறது. இந்த போராட்டத்தில் இருந்து காங்கிரஸ் பின்வாங்காது என்று ராகுல் காந்தி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் அலுவலகத்தை மாற்றுவதற்கு தற்போது என்ன அவசியம்: ஆசிா்வாதம் ஆச்சாரி கேள்வி
மாணவா்கள் தீவிரப் போராட்டம் எதிரொலி: ஜாா்க்கண்டில் ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தோ்வு ரத்து
வானதி சீனிவாசனுக்குப் பதிலாக பாஜக தேசிய மகளிா் அணி தலைவியாக ரூப் குமாரி நியமனம்




