கடந்த 6 மாதங்களாக காதலித்த நபர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததையடுத்து அவர் மீது இளம் பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அலிகார் மாவட்டத்தின் ஜீவன்கர் பகுதியில் வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில்,
ஃபைஸத் (20) என்பவர் சுமார் 6 மாதங்களாக சம்பந்தப்பட்ட பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், கடந்த ஒரு மாதகாலமாக அந்தப் பெண்ணை அவர் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பெண், காதலன் மீது ஆசிட் வீசியுள்ளார். அந்தப் பெண் மீது 326-ஏ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆசிட் வீச்சுக்குள்ளான ஃபைஸத்தின் தாய் ருக்ஸனா கூறுகையில்,
அந்த பெண்ணை எனது மூத்த மகன் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக இளைய மகன் கூறினான். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுமாறு எனது மகனை தொடர்ந்து அந்தப் பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு எனது மகன் சம்மதிக்கவில்லை. அவரது தொலைபேசி அழைப்பையும் ஏற்கவில்லை. சம்பவம் நடந்த தினத்தன்று காலை அந்தப் பெண்ணுடைய தொலைபேசி அழைப்பை ஏற்று பேசினான் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆசிட் வீச்சில் ஃபைஸத்தின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.