லடாக் எல்லையில் உயிரிழந்த பிகார் வீரர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு; அரசு வேலை: நிதிஷ் குமார் அறிவிப்பு
சீனத் தாக்குதலில் உயிரிழந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 5 வீரர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
உயிரிழந்த வீரர்களில் 5 பேர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். போஜ்பூரைச் சேர்ந்த சந்தன் குமார், வைசாலியைச் சேர்ந்த ஜெய் கிஷோர் சிங், சாம்ஸ்திபூரின் அமன் குமார் சிங், சஹார்சாவின் குண்டன் குமார் மற்றும் பாட்னாவின் சுனில் குமார் ஆகியோர் ஆவர். இவர்களில் சுனில் குமாரின் உடல் கடந்த புதன்கிழமையும், மற்ற நால்வரின் உடல் வெள்ளிக்கிழமையும் வந்தது.
இன்று காலை, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சமும், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.11 லட்சம் என ரூ. 36 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.