கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
கற்கள், காலி பாட்டில்கள் போன்றவற்றை நட்டா மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது வீசி திரிணமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். எனினும், நட்டா வந்த வாகனம் குண்டு துளைக்காத கவச வாகனம் என்பதால், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
அதேவேளையில், பாஜகவின் மேற்கு வங்க மாநில கண்காணிப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கையில் காயம் ஏற்பட்டது. பாஜக தொண்டர்களும் காயமடைந்தனர்.
இதையும் படிக்கலாமே.. பிப்ரவரியில் சென்னைப் புத்தகக் காட்சி?
விஜய் வர்கியா மற்றும் மாநில தலைவர் திலிப் கோஷ் ஆகியோரது வாகனங்கள் சேதமடைந்தன. ஒட்டுமொத்தமாக இந்த தாக்குதலில் பாஜக தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் வந்த 15 வாகனங்கள் சேதமடைந்தன.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா 2 நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கம் வந்தார். கட்சியின் தேர்தல் அலுவலகத்தைத் திறக்க கொல்கத்தாவில் ஹாஸ்டிங்க்ஸ் பகுதிக்கு நேற்று வந்தபோது அவருக்கு சுமார் 50 பேர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். புதிதாகத் திறக்கப்பட்ட அலுவலகம் முன்பு நிகழ்ந்த இந்த சம்பவத்தின்போது 'பாஜக திரும்பப் போ' என்ற கோஷமும் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் துறைமுகப் பகுதிக்குச் சென்ற நட்டா மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.