6 மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரம் வருவோருக்கு கட்டுப்பாடுகள்
மும்பை: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வரும் மகாராஷ்டிரம், கரோனா தொற்று அதிகமாக இருக்கும் 6 மாநிலங்களிலிருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மகாராஷ்டிர தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், கேரளம், கோவா, குஜராத், தில்லி மற்றும் என்சிஆர், ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் கரோனா தொற்று அபாயம் அதிகமுள்ள மாநிலங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
எனவே, இந்த மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரம் வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களில், உருமாறிய அதிதீவிர கரோனா பரவல் அதிகமிருப்பதால், அந்த தொற்று மகாராஷ்டிர மாநிலத்துக்குள் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த உத்தரவு வரும் வரை இந்தக் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.