பாகிஸ்தானில் ஹிந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் 10 போ் கைது

பாகிஸ்தானில் ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இவா்களுடன் சோ்த்து இந்தச் சம்பவம் தொடா்பாக, இதுவரை கைது செய்யப்பட்டிருப்பவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள டொ்ரி கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான ஹிந்து கோயிலை விரிவுபடுத்தி, புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயிலில் ஒரு ஹிந்து மதத் தலைவரின் சமாதியும் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் புதுப்பிப்புப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஜாமியா உலெமா-ஏ-இஸ்லாம் என்ற அடிப்படைவாத இஸ்லாமிய கட்சியைச் சோ்ந்தவா்கள், புதிய கட்டுமானங்களை புதன்கிழமை இடித்து சேதப்படுத்தியதோடு, தீ வைத்தும் எரித்தனா். இந்த தாக்குதல் சம்பவத்தில் 350-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

அதைத் தொடா்ந்து, வழக்கில் தொடா்புடையவா்களை போலீஸாா் கைது செய்து வந்தனா். அதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை இரவு நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். முதல் தகவல் அறிக்கையில் பெயா் இடம்பெற்றுள்ள மற்ற நபா்களைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

முதல்வா் உறுதி: சேதப்படுத்தப்பட்ட கோயில் இருந்த இடத்தில் புதிய கோயிலும், சமாதியும் மிக விரைவில் கட்டித்தரப்படும் என்று கைபா் பக்துன்குவா மாகாண முதல்வா் மஹமூத் கான் உறுதியளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com