மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமை பணியியல் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சிப்பெறுவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு உத்தரகண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது
உதய்மன் சத்ர யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மக்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணியியல் தேர்வுகளில் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுவோரில் முதல் 100 பேருக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமை பணியியல் தேர்வானது ஆண்டுதோறும் முதற்கட்டத்தேர்வு, முக்கியத் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடைபெறும்.
இதில் முதற்கட்டத் தேர்வுகளில் தேர்ச்சிபெறுவோருக்கு அடுத்தடுத்த தேர்வுகளில் கலந்துகொள்வதற்கு முன் தங்களை தயார் செய்துகொள்ள பணம் நிறைய செலவாகும் எனக் கூறப்படுகிறது. அவர்களுக்கு அரசின் இந்த புதிய திட்டம் பெரிதும் உதவிகரமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் , இந்தத் திட்டம் குடிமைப் பணியியல் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும். இதன் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் அதிகம் பேர் குடிமைப் பணியியல் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக உத்தரகண்ட் மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.