கர்நாடக மாநிலம் கடாக் மாவட்டத்திலுள்ள நகராட்சியில் பொதுக்கழிவறைகளை முறையாக பராமரிக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று (நவ.23) நகராட்சி அலுவலகத்தில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறுநீர் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் கடாக் பெட்டாகிரி நகராட்சியில் உள்ள பெரும்பாலான பொதுக்கழிப்பறைகள் பராமரிப்பின்றி இருந்துள்ளது. இதனை சீரமைத்து பராமரிக்கக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாததால், ஆத்திரமடைந்த ஸ்ரீ ராம சேனையைச் சேர்ந்த 15 பேர் கடாக் பெட்டகெரி நகராட்சி அலுவக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுநீர் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியதால் அவர்களைத் தடுக்க முடியாமல் காவல் துறையினர் திணறினர்.
அடுத்த 8 முதல் 10 நாள்களுக்குள் கழிவறைகளை பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லையெனில், நகராட்சி அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் மீண்டும் இந்த போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.
இது தொடர்பாக பேசிய ஸ்ரீராம சேனை அமைப்பைச் சேர்ந்த ராஜூ கூறியதாவது, கடாக் பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் கழிவறைகள் உள்ளன. இதனை பராமரிக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். அதனால் போராட்டம் நடத்தவேண்டியதைத் தவிர எங்களுக்குவேறு வழியில்லை என்று கூறினார்.
இது தொடர்பாக பேசிய நிர்வாக பொறியாளர், நாங்கள் அலுவலகத்திற்கு வருவதற்குள் அவர்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். ரோட்டரி சங்கம், திலக் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரமான கழிவறைகள் உள்ளதாகக் கூறினோம். ஆனால் சில கழிவறைகள் சீரமைக்க வேண்டிய நிலையில்தான் உள்ளன. அவற்றை விரைவில் சரிசெய்வோம். இன்னும் ஓரிரு நாள்களில் அதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறினார்.