பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அரவிந்த் கேஜரிவால், நேற்று தன்னை உபசரித்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தை தில்லியில் உள்ள தனது இல்லத்திற்கு விருந்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பஞ்சாபில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், பஞ்சாபில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
பிரசாரம் முடிந்த பிறகு பஞ்சாபிலுள்ள ஆட்டோ ஓட்டுநர் இல்லத்தில் இரவு உணவை உண்டார். அவரது உபசரிப்பில் மகிழ்ந்த கேஜரிவால், அவரது குடும்பத்தை தில்லியிலுள்ள தனது இல்லத்திற்கு விருந்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக முதல்வர் கேஜரிவால் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, பஞ்சாப் ஆட்டோ ஓட்டுநர் திலிப் திவாரி எங்கள் அனைவரையும் விருந்திற்காக வீட்டிற்கு அழைத்தார். அவரது குடும்பத்தினர் எங்களை உபசரித்து மிகுந்த அன்பை வழங்கினர். நானும் அவரது குடும்பத்தார் அனைவரையும் தில்லியிலுள்ள எனது இல்லத்திற்கு ஒருநாள் விருந்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.