பிகார் மாநிலத்தில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கையை சரிபார்த்து, மறுகூட்டல் செய்ததில், அம்மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை புதன்கிழமையன்று 5,400-லிருந்து 9,300 ஆக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, நாட்டில் இன்று கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புள்ளி விவரத்திலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இதுவரை இல்லாத வகையில் நாட்டில் பலி எண்ணிக்கை 6,148 என்று இன்றைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், பிகாரில் நடத்தப்பட்ட மறுகூட்டல்தான்.
கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்குமாறு பாட்னா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, 38 மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு சரிபார்த்தது.
இதில், ஜூன் 7-ஆம் தேதி பிகாரில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,424 ஆக இருந்தது. ஆனால், கரோனா பலி எண்ணிக்கையை சரிபார்த்த பிறகு, அதாவது ஜூன் 8-ஆம் தேதியே இந்த எண்ணிக்கை 72.84% உயர்ந்து 9,375 ஆக உயர்ந்துள்ளது.