போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் காவலுக்கு பிறகு ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்டோரின் 3 நாள் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே ஆர்யன் கான் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஆர்யன் கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக்கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.