கர்நாடக மாநிலத்தில் சாம்பார் சுவையாக வைக்காததால் தனது தாய் மற்றும் தங்கையை சுட்டுக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னடா பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுநாத் ஹஸ்லார் (24). இவரது தாய் பார்வதி நாராயணா ஹஸ்லார், தங்கை ரம்யா நாராயண ஹஸ்லார்.
இந்நிலையில் புதன்கிழமை மதுபோதையில் தனது வீட்டுக்கு வந்த மஞ்சுநாத் உணவருந்தும்போது சாம்பார் சுவையாக இல்லை என தனது தாய் மற்றும் தங்கையுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும் முன்னதாக தனது தங்கைக்கு செல்போன் வாங்குவது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து வந்த மஞ்சுநாத் வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தனது தாய் மற்றும் தங்கையை சுட்டார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி இருவரும் சரிந்தனர். பின்னர் இருவரும் துடிதுடிக்க பலியாகினர். இந்நிலையில் வேலை முடிந்த வீட்டுக்கு வந்த மஞ்சுநாத்தின் தந்தை கொலை சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த மஞ்சுநாத்தின் தந்தை அவர் மீது புகார் அளித்தார்.
சாம்பார் சுவையாக இல்லாததால் தனது குடும்பத்தினரையே துப்பாக்கியால் இளைஞர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.