புது தில்லி: நாட்டில் கரோனா பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை. நாள்தோறும் 15 முதல் 16 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ் பூஷண், பண்டிகை நாள்கள் நெருங்குகின்றன. மக்கள், கூட்டம் கூடுவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் மக்களை மத்திய சுகாதாரத் துறை கேட்டுக் கொள்கிறது. வெளியிடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி பண்டிகைககளைக் கொண்டாடுங்கள் என்றும் கூறினார்.
மேலும், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளில் கேரளத்தில் மட்டும் 52 சதவீதம் பேர் அதாவது 1,44,000 பேர் உள்ளனர். மகாராஷ்டிரத்தில் 40 ஆயிரம் கரோனா நோயாளிகள் உள்ளனர். தமிழகத்தில் இது 17 ஆயிரமாக உள்ளது. மிசோரத்தில் 16,800 ஆகவும், கர்நாடகத்தில் 12,000 ஆகவும், ஆந்திரத்தில் 11,000 ஆகவும் உள்ளது.
டெங்கு நோய்க்கு எதிராக தடுப்பூசி பரிசோதிக்கும் திட்டத்தை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை முடிவெடுத்திருப்பதகாவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.