தில்லியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தற்காலிக தடை

தில்லி ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை உடனடியாக நிறுத்த உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள்
ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள்
Published on
Updated on
1 min read

தில்லி ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை உடனடியாக நிறுத்த உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வடக்கு தில்லி மாநகராட்சித் தரப்பில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. அதில், ஒருபகுதியாக ஜஹாங்கீா்புரியிலும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஜஹாங்கீா்புரி பகுதியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 9 போலீஸாரும், ஒரு குடிமகனும் காயமடைந்தனா். தொடர்ந்து, அப்பகுதியை சுற்றிலும் 1,250 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

ஜவாங்கீர்புரி பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கருத்தில் கொண்டு ஒரு தரப்பினரின் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், தற்போது இருக்கும் நிலையே அங்கு தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கின் விசாரணை நாளை காலை தொடங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com