அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ரெளத் குடும்பத்தினரை சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சஞ்சய் ரெளத் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து விசாரணைக்காக சஞ்சய் ரெளத்தை அமலாக்கத் துறையினர் அழைத்துச் சென்றனர். விசாரணையைத் தொடர்ந்து அவரை அமலாக்கத் துறை கைது செய்தது.
அதனைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் சஞ்சய் ரெளத் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சஞ்சய் ரெளத் குடும்பத்தினரை சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே நேரில் சென்று சந்தித்தார்.
அமலாக்கத் துறை நேற்று முழுவதும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட நிலையில், அவர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேசினார்.