கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்த கர்நாடக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக அரசு கடந்த 26ஆம் தேதி அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து வக்ஃபு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.எம்.சுந்தரேஷ், ஏ.எஸ்.ஓகா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈத்கா மைதானத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என அறிவித்தது.
இந்த மைதானத்தை இஸ்லாமியர்களின் பண்டிகைகளை கொண்டாடவும், மற்ற நேரங்களில் விளையாட்டுத் திடலாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இடைக்கால உத்தரவில் தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இருப்பினும், மாநில அரசு சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பின்னர், இரண்டு ஏக்கர் நிலத்தில் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.