பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என ராகுல் காந்தி அறிவிக்கவுள்ள நிலையில், முதல்வர் போட்டியில் உள்ள நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ் தலைமையை விமரிசித்துள்ளார். தாளத்திற்கு ஏற்ப நடனமாடக் கூடிய பலவீனமான முதல்வரை மேலிருப்பவர்கள் விரும்புவதாக அவர் நேற்று கூறியுள்ளார்.
ஆதரவாளர்களிடம் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "புதிய பஞ்சாப் உருவாக வேண்டும் என்றால் அது முதல்வர் கையில்தான் உள்ளது. இந்த முறை முதல்வரை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தங்கள் தாளத்துக்கு ஆடக்கூடிய பலவீனமான முதல்வரையே விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட முதல்வர் வேண்டுமா?" என்றார்.
நேரு குடும்பத்தை மறைமுகமாக விமர்சித்ததற்கு அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் கர கோஷம் எழுப்பினர். கடந்த பல மாதங்களாகவே முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என சித்து விரும்பிவருகிறார். கடந்த செப்டம்பர் மாதம், அவரின் போட்டியாளராக கருதப்பட்ட அமரிந்தர் முதல்வராக பொறுப்பிலிருந்து விலகியதையடுத்து, அது அவருக்கு அளிக்கப்படும் என பேசப்பட்டது.
ஆனால், அந்த பதவி சரண்ஜித் சிங் சன்னிக்கு அளிக்கப்பட்டது. அந்தவகையில், தான் ஒரு மாற்று முதல்வர் அல்ல என்பதை சன்னி தனது நடவடிக்கைகளால் சுட்டிகாட்டிவருகிறார்.
இதையும் படிக்க | உக்ரைன் தொடா்பான தீா்மானம்: ஐ.நா.வில் இந்தியா புறக்கணிப்பு
சன்னி, சித்து ஆகியோருக்கிடையே வெளிப்படையாக நடைபெற்றுவரும் அதிகாரப்போட்டியில், சன்னியே வெல்வதற்கு சற்று அதிக வாய்ப்புள்ளது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் களமிறக்கியதன் மூலம், ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தாலும் மற்றொரு தொகுதியில் வெற்றிபெற வைத்து சன்னியை முதல்வராக்கிவிடலாம் என காங்கிரஸ் தலைமை நினைப்பதாக கூறப்படுகிறது.