பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றவுள்ளாா். அதனைத்தொடா்ந்து கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், இரண்டாம் பகுதி மாா்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க காணொலி வாயிலாக காங்கிரஸின் திட்டக்குழு கூடியது. இந்த கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள், ஏர் இந்தியா, பணவீக்கம், சீனாவுடனான எல்லைப் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றை ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் ஒருங்கிணைந்து குரல் எழுப்புவது என முடிவெடுக்கப்பட்டது.
ஆலோசனையில், ஏ.கே. அந்தோணி, கே.சி. வேணுகோபால், மல்லிகார்ஜுன கார்கே, அதீர் ரஞ்சன் செளத்ரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.