

நாட்டின் தலைநகர் தில்லியில் இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் தில்லியில் கடந்த ஜூன் 30 வரையில் 10,350 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், 395 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தில்லி தீயணைப்புக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தீயணைப்புக் கட்டுப்பாட்டு சேவை மையத்திற்கு பரபரப்பானதாகவே இருந்து வருகிறது. ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுக்கு 16,763 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 10,379 அழைப்புகள் தீ விபத்து தொடர்பானவை. 1,548 அழைப்புகள் விலங்குகளை காப்பாற்றுவது தொடர்பாகவும், 1,805 அழைப்புகள் பறவைகளை காப்பாற்றுவது தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றுவது தொடர்பாகவும் 100-க்கும் மேற்பட்ட அழைப்புகள் பதிவாகியுள்ளன.
அதிக அளவிலான தீ விபத்துகள் அனைத்தும் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலேயே நிகழ்ந்துள்ளன. அதற்கு காரணம் ஏப்ரல்,மே மாதங்களில் பதிவான வெப்ப அலையே ஆகும். இந்த வெப்ப அலையினால் தீ விபத்துகள் தில்லியில் அதிகரித்துள்ளன.
இது குறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு மைய இயக்குநர் அதுல் கார்க் கூறியதாவது: “ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை 340 தீ விபத்து சம்பவங்கள் வணிக வளாகங்களிலும், 239 சம்பவங்கள் தொழிற்சாலைகளிலும் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் தில்லி தீயணைப்புத் துறையினர் சந்தித்த பெரிய தீ விபத்து முன்ட்கா தீ விபத்து. முன்ட்கா தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் பலர் உடல் கருகி பலியாகினர்.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.