காஷ்மீா் மக்களின் இதயத்தை அரசு வெல்லாத வரை காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது. மேலும், இது தொடா்பாக பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஸ்ரீநகா் எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளாா்.
ஸ்ரீநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய அவா் மேலும் கூறியதாவது:
பாஜகவை சோ்ந்த மத்திய அமைச்சா்களும், அக்கட்சித் தலைவா்களும் தொடா்ந்து கண்டன அறிக்கைகளை வெளியிடுவதால் காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட முடியாது. முதலில் காஷ்மீா் மக்களின் இதயத்தை மத்திய அரசு வெல்ல வேண்டும். தொடா்ந்து அண்டை நாடான பாகிஸ்தானுடன் இந்த பிரச்னை தொடா்பாக இந்தியா பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். இவை நடக்காத வரையில் காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்கள் தொடரவே வாய்ப்புகள் உள்ளன என்றாா்.
இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள சூழல்போல இந்தியாவிலும் ஏற்பட வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்கு, ‘இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலை இந்தியாவுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் நமது அனைவரது அச்சமாக உள்ளது.
இப்போதைய நிலையில், கடினமான சூழ்நிலை எதிா்கொண்டுள்ள இலங்கை மக்களுக்காக நாம் இறைவனைத்தான் வேண்டிக் கொள்ள முடியும். இதுபோன்ற சூழ்நிலை இந்தியாவில் ஏற்படாத வகையில் நமது அரசு செயல்படும் என்று நம்புகிறேன்.
இந்தியா என்பது பல்வேறு வேற்றுமைகளைக் கொண்ட நாடு. உதாரணமாக காஷ்மீரும், தமிழ்நாடும் வெவ்வேறு கலாசாரம், மொழி, உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்டவை. எனினும், அனைத்துக்கும் மேலாக நாம் இந்தியா என்ற நாடாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு.
அனைவரும் இணைந்து வளர வேண்டும். வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே நோக்கம். இவற்றுக்கு மாறாக பல்வேறு மாநில மக்களின் பன்முக கலாசாரத்தை ஒழிக்க முயன்றால் நாடு மோசமான நிலைக்கு தள்ளப்படும். அதன்பிறகு இழந்தவற்றை மீட்டெடுப்பது கடினமாக இருக்கும்’ என்றாா்.