மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களை, அவர்களது சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்த கொடுமை குறித்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலையணையுடன் உடலுறவு கொள்வது போல நடிப்பது, சக கல்லூரி மாணவிகள் பெயரைச் சொல்லி அவரை இழிவாகப் பேசச் சொல்வது என கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவர்களை கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் இறுதியாண்டு மாணவர்கள்.
மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி வளாகத்துக்கு அருகே அமைந்திருக்கும் அவர்களது குடியிருப்பில் இந்த அனைத்தும் நடந்தேறியிருக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவின், ரேகிங் தடுப்பு உதவி எண்ணில், மாணவர் ஒருவர் புகார் அளித்ததன் காரணமாகவே இந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இது மட்டுமல்ல, ரேகிங் கொடுமைகளுக்கு ஒரு பெரிய பட்டியலே நீள்கிறது. அதாவது, முதலாமாண்டு மாணவர்கள் அவர்களை ஒருவருக்கு ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்வது, செல்லிடப்பேசிகளை பிடுங்கி வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வது என்பதும் அடங்கும்.
இது குறித்து உடனடியாக மூத்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பல்கலைக்கழக மானியக் குழு இந்த புகாரை கல்லூரி நிர்வாகத்துக்கும் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. அர்பிதா முகர்ஜி வீடா அல்லது அலி பாபா குகையா? வியக்கும் அதிகாரிகள்
முதற்கட்ட விசாரணையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க இந்த புகார் விவகாரம் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சில மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ரேகிங் தடுப்புச் சட்டம் 2009ன் கீழ் முதற்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
முதலாமாண்டு மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பிறகு ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் வேலை தொடங்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.