அக்னி வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அதன் நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களை எரித்து வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, இன்று நாடு தழுவிய 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அக்னிபத் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
'அக்னிபத்' திட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அக்னிபத் போராட்ட வன்முறை வருத்தம் அளிக்கிறது. கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது நான் கூறியதையே மீண்டும் கூறுகிறேன். அக்னி வீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களை சிறந்த வேலைவாய்ப்பிற்குரியவர்களாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்த ட்விட்டர் உரையாடலில் 'அக்னி வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனத்தில் என்ன வேலை வழங்கப்படும்?' என்று ஒருவர் கேட்க, அதற்கு பதில் அளித்துள்ள ஆனந்த் மஹிந்திரா,
கார்ப்பரேட் துறையில் அக்னி வீரர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு இருக்கிறது. தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுடன் அக்னி வீரர்கள், தொழில்துறைக்கு சந்தைக்கு தேவையான தொழில்முறை தீர்வுகளை வழங்குவார்கள். இது செயல்பாடுகள் முதல் நிர்வாகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை வரையிலான முழு அளவையும் உள்ளடக்கியது' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | 'அக்னிபத்' திட்டம் என்றால் என்ன? அச்சங்களும் அச்சுறுத்தல்களும்