ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவரும், பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகள் தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் அளிக்கவுள்ளதாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
74 வயதான யாத்வ், கடந்த மாதம் சிறுநீரக பிரச்னை காரணமாக சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டிருந்தார். பல உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் ஆர்ஜெடி தலைவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள அவரது மகள் ரோஷ்னி ஆச்சார்யா தனது தந்தைக்கு சிறுநீரகத்தைத் தானம் அளித்து, புதிய வாழ்வளிக்க முன்வந்துள்ளதாக, அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தீவன வழக்குகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிகிச்சைக்காக தில்லி மற்றும் ராஞ்சியில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.