ஷ்ரத்தா கொலை: காவல்துறையை ஏமாற்றிய குற்றவாளியின் தனித்திறன்

கால் சென்டர் ஊழியராக இருந்த ஷ்ரத்தா வால்கருடன், திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த அஃப்தாப் பூனாவாலா, அவரை கொலை செய்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷ்ரத்தா கொலை: காவல்துறையை ஏமாற்றிய குற்றவாளியின் தனித்திறன்
ஷ்ரத்தா கொலை: காவல்துறையை ஏமாற்றிய குற்றவாளியின் தனித்திறன்
Published on
Updated on
1 min read

மும்பை: கால் சென்டர் ஊழியராக இருந்த ஷ்ரத்தா வால்கருடன், திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த அஃப்தாப் பூனாவாலா, அவரை கொலை செய்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷ்ரத்தாவைக் காணவில்லை என்று தேடி வந்த காவல்துறையினர், ஆரம்பத்தில் அஃப்தாப்பிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர் முகத்தில் எந்த பயமோ அல்லது வருத்தமோ இல்லாமல் காவல்நிலையத்துக்கு வந்து மிக சாதாரணமாக கேள்விகளை எதிர்கொண்டுள்ளார். இதனால், அவர் மீது சந்தேகம் வராமல், அவரை காவல்துறையினர் விசாரணைக்குப் பிறகு அனுப்பிவிட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மாணிக்பூர் காவல்நிலையத்தில் இருந்து, அஃப்தாப் இதற்கு முன்பு மூன்று முறை அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் இரண்டு முறையும், நவம்பர் மாதம் 3ஆம் தேதியும் அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

அப்போது, மிகவும் சலனமற்று, எந்த வருத்தமோ பயமோ அவரது முகத்தில் இல்லை என்றும், காவல்துறையினர் கேட்டதற்கு, தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஷ்ரத்தா கிளம்பி போய்விட்டதாகவும், நாங்கள் இப்போது ஒன்றாக வசிக்கவில்லை என்றும் அசால்ட்டாக பதிலளித்துள்ளார்.

முதலில் அக்டோபர் மாதம் அவர் காவல்நிலையத்துக்கு வந்தார். ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டு, பிறகு அவர் அனுப்பப்பட்டார். இறுதியாக நவம்பர் 3ஆம் தேதி மீண்டும் வரவழைக்கப்பட்டார். அப்போது அவரிடம் இரண்டு பக்க வாக்குமூலம் வாங்கிக் கொண்டனர் காவலர்கள். ஆனால், இரண்டு வேளைகளிலும் அவர் மிக சாதாரணமாக, பயமோ வருத்தமோ முகத்தில் காட்டாமல் இருந்துள்ளதாக காவலர்கள் கூறுகிறார்கள்.

அவரிடம் ஷ்ரத்தா பற்றி கேட்டதற்கு, நாங்கள் பிரிந்துவிட்டோம், அவர் பிரிந்து சென்றுவிட்டார், இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று ஒரே மாதிரியான பதிலையே மீண்டும் மீண்டும் கூறியதால், ஆரம்பத்தில் அவர் மீது காவலர்களுக்கு சந்தேகம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், அப்போதும் அவர் மீது சந்தேகம் எழவில்லை என்று கூறுகிறார்கள்.

ஷ்ரத்தாவின் நண்பர்களோ, இந்த வழக்கில் கொலை நடந்ததற்கான பின்னணியை நிச்சயம் ஆராய வேண்டும் என்றும், உண்மையில் காதலிக்கும் ஒருவர் இதுபோன்ற கொடூரச் செயலில் ஈடுபட மாட்டார் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com