ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரான்சிஸ்கோ சர்தின்ஹா தெரிவித்துள்ளார்.
பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும், இதனால் நடைபயணத்தை நிறுத்திவிட்டு குஜராத், ஹிமாசலப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தலைவரை தேர்வு செய்வதர்கான தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சர்தின்ஹா, ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத், ஹிமாசலப் பிரதேசத்தில் மக்களிடையே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே பாஜகவை வீழ்த்தும் வாக்கு சதவிகிதத்தைப் பெற முடியும். பாஜகவுக்கு எதிரான ஒரே கட்சி காங்கிரஸ்தான் எனக் குறிப்பிட்டார்.
ஹிமாசலப் பிரதேசத்தில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து பேசிய சர்தின்ஹா, சசிதரூர் என்னுடைய நண்பர். கட்சிக்காக உடன் இணைந்து பணிபுரிபவர். ஆனால், மல்லிகார்ஜுன கார்கேவுக்காக நான் அவரிடம் கோரிக்கை வைப்பேன். பெரும்பாலான தொண்டர்கள் மல்லிகார்ஜுன கார்கே வர வேண்டும் என நினைக்கிறனர். நாம் தோற்கிறோம் என்பது 100 சதவிகிதம் தெரிந்தாலும் கூட போட்டியிட்டோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.