கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்திவருகின்றன. அந்த வகையில், பரவலை தடுக்கும் விதமாக அஸ்ஸாம் அரசும் கரோனா விதிகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 11 மணி தொடங்கவிருந்த இரவு நேர ஊரடங்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 10 மணிக்கு தொடங்கி 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அனுமதித்தால், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைக்கு 25,000 ரூபாய் அபராதம் வதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில், தடுப்பூசி போடாத பணியாளர்கள் ஜனவரி 15க்குப் பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிய விதிகளின்படி அவர்களுக்கு ஊதியமின்றி விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்சரி, 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படும். 9-12 வகுப்பு மாணவர்களுக்கு கலப்பு வகுப்புகளே தொடரவுள்ளது. அவர்கள் மூன்று நாட்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவுள்ளது.