தில்லி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்
செளரப் பரத்வாஜ், தேர்தல் கூட்டணி குறித்து எங்கள் (ஆம் ஆத்மி) தலைமை முடிவு செய்யும். ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகக் குழு, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளுடன் அமர்ந்து இது தொடர்பாக ஆலோசிப்போம்.
அவர்களுக்கு (காங்கிரஸ்) தில்லியில் கூட்டணி தேவைப்படவில்லை என்றால், இந்தியா கூட்டணியில் நாங்கள் இருப்பதற்கும் அர்த்தமில்லை. இது நேர விரையம்தான். இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுப்பது குறித்து எங்கள் கட்சி தலைமை முடிவு செய்யும் எனக் குறிப்பிட்டார்.