ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி விவகாரத்தில் கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை கைது செய்தது.
தற்போது நீதிமன்றக் காவலில் அவர் திஹார் சிறையில் இருக்கிறார். அவரது நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் இன்று(திங்கள்கிழமை) தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை(டிச. 12) நடைபெறவுள்ளது.
முன்னதாக, தன்னை மேலும் காவலில் வைத்திருப்பதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படாது என்றும், இதனால் ஜாமீனில் தன்னை விடுவிக்குமாறும் தில்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான முந்தைய விசாரணையில் சஞ்சய் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.