மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனைத்து அரசாணை மற்றும் அரசுக் கோப்புகளிலும் உள்ள 'மத்திய அரசு' என்ற வார்த்தைக்கு பதிலாக 'ஒன்றிய அரசு' என்பதை மாற்றக் கோரிய பொதுநல மனுவை, தில்லி உயர்நீதிமன்றம் ‘இது பொதுநல மனுக்கான விவகாரம் அல்ல’ என்று கூறி செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
மத்திய அரசு என்ற பதத்திற்கு அரசியலமைப்பில் எந்தவொரு இடமும் இல்லை. நாடாளுமன்ற குழுக்களும் ஒன்றிய அரசு என்ற பதத்தையே ஆதரித்துள்ளன என்று மனுதாரர் கூறினார்.
தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன், “இந்த இரு வார்த்தைகளுமே மாற்றி பயன்படுத்திக் கொள்ளத்தக்கவை. மேலும் இந்த விவகாரம் பொதுநல மனுவுக்கானது அல்ல” என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது: “இந்த பொதுநல மனுவில் என்ன இருக்கிறது? மத்திய அரசு என இருப்பதற்கும், ஒன்றிய அரசு என இருப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு புரியவில்லை.
மத்திய அரசு, ஒன்றிய அரசு என இரண்டு வார்த்தைகளையும் மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டில் நீங்கள் எப்படி குறிப்பிடுகிறீர்கள் என்பது பிரச்னையே அல்ல. நீதிமன்றத்திற்கு இதனை விட முக்கியமான பல விவகாரங்கள் உள்ளன. மேலும் இது பொதுநல மனுவே அல்ல. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.