ஜாம்நகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளின் முகமூடியில் தீ பற்றிய சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாச கோளாறு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. .
எதனால் தீ உருவானது என்கிற காரணம் உடனடியாகத் தெரியவில்லை என குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையின் மருத்துவர் தீபக் திவாரி தெரிவித்துள்ளார்.
சுவாச நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் 15-க்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். தீ உருவானதும் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்ததால் சேதம் பெரிதாக ஏற்படவில்லை. அதனால் யாரையும் இடம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நுரையீரல் சார்ந்த நோய்களுக்குச் சிகிச்சை தரும் பிரிவில் ஆக்சிஜன் பயன்பாடு முக்கியமானது, இப்படியான சூழலில் நோயாளி அணிந்திருந்த ஆக்சிஜன் குழாய் உடன் இணைக்கப்பட்டிருக்கும் முகமூடியில் தீ பற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: நாங்கள் மீட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை!: கனிமொழி
தீக்காயங்கள் நெற்றி மற்றும் விரல்களில் ஏற்பட்டதாகவும் அவருக்குச் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. இது குறித்து ஆய்வு செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.