புதுதில்லி: தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான (நபார்டு) 50-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக மூன்று நாள் வேளாண் கண்காட்சியை நடத்தவிருக்கிறது.
தில்லி ஹாட்டில் நடைபெறும் இந்த கண்காட்சியில், 21 மாநிலங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் பங்கேற்பர் என நபார்டு வங்கி தெரிவித்துள்ளது.
இந்த கண்காட்சியில் நபார்டு வங்கி மற்றும் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு ஆதரவுடன் செயல்படும் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் முன்னோடித் திட்டத்தின் கீழ், பல்வேறு வகையான இயற்கை மற்றும் சிறுதானிய அடிப்படையிலான வேளாண் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்த உள்ளனர்.
மேலும் இந்தியாவின் விவசாய நிலப்பரப்பை மாற்றியமைப்பதில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை இந்த கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.