போபால்: மத்தியப் பிரதேசத்தில் அரசு பல்கலைக் கழகத்தில் முகமூடி அணிந்த நபர் வெடிகுண்டு வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபால்பூரில் ராணி துர்காவதி அரசுப் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக நிர்வாகத்துக்கு எதிராக காங்கிரஸின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், பல்கலைக் கழக வளாகத்தில் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர், அடுத்தடுத்து இரு வெடிகுண்டுகளை வீசிச்சென்றார்.
பல்கலைக் கழக வாயிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொரு நபரின் வாகனத்தில் புறப்பட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
பல்கலைக் கழகத்தில் அந்த நேரத்தில் மாணவர்கள் நடமாட்டம் குறைந்திருந்ததால், இந்த வெடிகுண்டு தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பல்கலைக் கழக வளாகத்தில் வெடிக்காத நிலையில், இரு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு வீசியவர்கள் எச்சரிக்கும் வகையில் யாருமில்லாத பகுதியில் வெடிகுண்டு வீசியுள்ளதாக காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர். அடுத்தமுறை தாக்குதல் தீவிரமாக இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பு தலைவர் அட்னன் அன்சாரியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.