புது தில்லி: ஜோஷிமட் நெருக்கடி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஆர்.கே.சிங், பூபேந்திர யாதவ், கஜேந்திர ஷெகாவத் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். உள்துறை செயலாளர் அஜய் பல்லா, பிஆர்ஓ மற்றும் என்டிஆர்எப் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, புதன்கிழமை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசி உரையாடலில் புனித நகரத்தின் நிலைமையைக் குறித்த தகவல்களை கோரியிருந்தார். மேலும் உதவிக்கு உத்தரவாதம் அளித்தார்.
ஜோஷிமட் நிலைமையை உள்துறை அமைச்சகமும் அமித் ஷாவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
வட்டாரங்களின்படி, நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் கூட்டத்தில் பகிரப்பட்டன, தவிர எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கட்டடங்களில் அதிகரித்து வரும் விரிசல்கள், நிலச்சரிவு மற்றும் நிலம் சரியும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு என்டிஆர்எப் மற்றும் எஸ்டிஆர்எப் குழுக்கள் நகரில் உள்ளன.
அதே நேரத்தில், எல்லை மேலாண்மை செயலாளர் டாக்டர் தர்மேந்திர சிங் கங்வார் தலைமையிலான உயர்மட்ட மத்திய குழு நிலைமையை ஆய்வு செய்து வருகிறது.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் இந்த விவகாரம் குறித்து தாமியிடம் பேசினார்.