டேஹ்ராடூன்: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்ஆர்எஸ்சி மையம் வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் புகைப்படத்தில் ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியிருக்கும் ஒட்டுமொத்த நகரமுமே புதைபடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படம், ஜோஷிமட் எனும் நகரின் எதிர்காலம் பற்றி துல்லியமாக கணிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இஸ்ரோவின் துவக்கநிலை ஆய்வறிக்கையின் அடிப்படையில், மிகவும் அபாயம் நிறைந்த பகுதிகள் என்று கண்டறியப்பட்டிருக்கும் இடத்திலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணியை உத்தரகண்ட் அரசு மேற்கொள்ளவிருக்கிறது.
இதையும் படிக்க.. உலகின் நீண்ட சொகுசுப் படகில் நாம் பயணிக்க முடியுமா? எவ்வளவு கட்டணம்?
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை நிலம் சரியும் நிகழ்வானது மிக மெதுவாக நடந்து வருவதாகவும் இந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 8.9 செ.மீ. அளவுக்கு நிலம் சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், டிசம்பர் முதல் ஜனவரி வரை இந்த நிலச்சரிவின் வேகம் அதிகரித்து வெறும் 12 நாள்களில் 5.4 செ.மீ. அளவுக்கு சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலச்சரிவு காரணமாக ஜோஷிமட் - ஔலி சாலையும் கூட உருகுலைந்துப் போகலாம் என்கிறது செயற்கைக் கோள் புகைப்படம்.
வீடு மற்றும் சாலைகளில் ஏற்பட்டிருக்கும் விரிசல் தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தி வரும் நிலையில், இஸ்ரோவின் இந்த முதற்கட்ட ஆய்வறிக்கை நிச்சயம் அதிர்ச்சியூட்டுவதாகவே உள்ளது.