உத்தர பிரதேச சிறைத்துறை அமைச்சர் சுரேஷ் ரஹி சென்ற கார், டிராக்டர் டிராலி மீது மோதியதில் அவர் காயமின்றி தப்பினார்.
உத்தர பிரதேச மாநில சிறைத்துறை அமைச்சர் சுரேஷ் ரஹி லக்னௌவில் இருந்து தியோரியாவுக்கு காரில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய கார் கோரக்பூர் என்ற இடத்தில் டிராக்டர் டிராலி மீது மோதி விபத்துக்குள்ளானது.
எனினும், இந்த விபத்தில் அமைச்சர் ரஹி காயமின்றி உயிர் தப்பினார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேசமயம் அமைச்சரின் கார் சேதமடைந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதன் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.