ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெயர் மாற்றப்பட்டு இன்று புதிய பெயர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிகார் மாநிலம் பாட்னாவில் முதல் கூட்டத்தை கடந்த மாதம் நடத்தினர். அதில், 16 கட்சிகள் கலந்து கொண்டன.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கான வியூகங்கள் இந்த கூட்டத்தில் வகுக்கப்படவுள்ளன. பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளன.
கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தன. இந்த கூட்டணி 2014-ஆம் ஆண்டு பாஜகவிடம் ஆட்சியை இழந்தது.
தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடம்பெறாத திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயரை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 4 பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சோனியா காந்தியிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் புதிய பெயர் இறுதி செய்யப்பட்டு இன்று மாலை சோனியா காந்தி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.