பல்வேறு மாநில, யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தி வருகிறார்.
தில்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட உள்துறை அமைச்சக அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
பேரிடர் மேலாண்மையில் அடுத்த கட்டத்தை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து கூட்டத்தில் பேசப்படவுள்ளது. பேரிடர் மேலாண்மையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது.
தற்போது அரபிக்கடலில் பிபர்ஜாய் புயல் உருவாகியுள்ள சூழ்நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பிபர்ஜாய் புயல் தொடர்பாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் 8 எம்.பி.க்களுடன் அமைச்சர் அமித் ஷா இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.