ரயில் பயணத்தின்போது பயணியின் உடைமை திருட்டுப் போவது ரயில்வே துறையின் குறைபாடு கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தவறுவதற்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஒருவருக்கு ரயில்வே துறை 1 லட்சம் தர வேண்டும் என தேசிய நுகர்வோர் குறைதீர் குழு கூறியதை விசாரித்த உச்சநீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் ஒருவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம், தனது ரயில் பயணத்தின்போது ரூ. 1 லட்சத்தினை இழந்துவிட்டதாக முறையிட்டுள்ளார். தான் இழந்த பணத்தை ரயில்வே துறை மீட்டுத் தர வேண்டும் எனவும் அவர் முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமனுல்லா தலைமையிலான அமர்வு கூறியதாவது: இந்த திருட்டில் ரயில்வே துறையிடம் குறைபாடு உள்ளது எனக் கூறுவதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பயணி ஒருவர் தனது உடைமைகளை பாதுப்பாக வைத்துக் கொள்ள தவறுவதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என்றனர்.
தேசிய நுகர்வோர் குறைதீர் குழு தொழிலதிபர் சுரேந்தர் போலாவுக்கு ரயில்வே நிர்வாகம் 1 லட்சம் வழங்கக் கோரிய உத்தரவை ரயில்வே நிர்வாகம் மேல்முறையீடு செய்ததில் இந்த உச்சநீதிமன்ற அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் சுரேந்தர் போலா கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி காசி விஸ்வநாத் விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் துணியினால் செய்யப்பட்ட பெல்ட் ஒன்றை தனது இடுப்பில் அணிந்திருந்ததாகவும், அதில் ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. பணத்தினை தனது வியாபாரம் தொடர்பாக மற்றொருவரிடம் கொடுக்க சென்றபோது பணம் திருட்டுப் போனதாக கூறப்படுகிறது. சுரேந்தர் போலா அதிகாலை 3.30 மணிக்கு எழுந்ததும் அவர் பணத்தினை வைத்திருந்த துணியினால் ஆன அவரது பெல்ட் கத்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.