மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 36 மையங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 134, பாஜக-64, மஜத -22, பிற கட்சிகள்- 4 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோசமான நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் ஆவேசமாக வாக்களித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது கர்நாடக மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதைக் காட்டுகிறது. பிரதமர், உள்துறை அமைச்சர், டஜன் கணக்கான அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள் இங்கு முகாமிட்டிருந்தும், ஆள்பலம், பணபலம் என அவர்களின் முழு பலம் பயன்படுத்தப்பட்ட போதிலும், மக்கள் காங்கிரசுக்கு ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். இது மக்களின் வெற்றி.
இதையும் படிக்க | கர்நாடகத் தேர்தல்: 130 தொகுதிகளைக் கடந்தது காங்கிரஸ்!
மக்கள் எங்களின் பணியை ஆதரித்துள்ளனர். வெற்றி பெற்றாலும் தோற்கடிக்கப்பட்டாலும் மக்களுக்கு ஜனநாயகப் பணியாற்ற வேண்டும்.
இன்று மாலைக்குள் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் வருமாறு செய்தி அனுப்பியுள்ளோம். அவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் இங்கு வருவார்கள், அவர்கள் வந்தவுடன், அவர்களுக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய நேரத்தில் அறிவுறுத்தப்படும். கட்சித் தலைமை அதுகுறித்து முடிவெடுக்கும். முதல்வர் யார் என்பது குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
மேலும் வெற்றி பெற்றவர்களுக்கும் கட்சியைச் சார்ந்த அனைவர்க்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிக்க | கர்நாடகத் தேர்தல் மட்டுமல்ல... இடைத்தேர்தல்களிலும் பாஜக பின்னடைவு!