ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட்டை கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஜெய்ப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்பு குறித்து டி.கே.சிவகுமாா் கூறுகையில், மக்களுக்கான பொதுநலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளைச் செயல்படுத்துவதில் ராஜஸ்தான் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா், முதல்வரின் சிரஞ்சீவி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தற்காலிகப் பணியாளா்கள் சட்டம், சுகாதார உரிமை, அன்னபூா்ணா உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் போன்றவை நாடு முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.
அதேபோல் தற்போது கோட்டாவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சம்பல் நதிக்கரைத் திட்டமும், ஆக்சிஜன் நகரப் பூங்காவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இச்சந்திப்பின்போது ராஜஸ்தான் மாநிலக் கல்வி அமைச்சா் பி.டி.கல்லா, பெட்ரோலிய மற்றும் கனிம வளத் துறை அமைச்சா் ஜெயின் பையா, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரதாப் சிங் ஆகியோா் உடனிருந்தனா்.