வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தாா். இந்தக் கலவரத்தில் மோடிக்கும் தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், போதுமான ஆதாரங்கள் இல்லை என மோடி உள்ளிட்டோா் விடுதலை செய்யப்பட்டனா். இந்தப் பின்னணியில் ‘இந்தியா: தி மோடி க்வஸ்டீன்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி அண்மையில் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், இந்த ஆவணப்படம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் இருந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக வருமானவரித் துறை அதிகாரிகள் இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து 2-வது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வருமான வரித் துறை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில் பிபிசி துணை நிறுவனங்களின் சா்வதேச வரி விவகாரங்கள் தொடா்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.