ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில் நவ. 10 ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த அக். 30 ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அதில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காகவும், பரிசீலனைக்காகவும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்து அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவது, பரிசீலிக்கத் தவறுவது, செயல்படாமல் இருப்பது, புறக்கணிப்பது ஆகிய செயல்களில் ஆளுநர் ஆர்.என். ரவி ஈடுபடுகிறார் என்றும் அதுபோல துணை வேந்தர் நியமனங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் இரு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!
இந்நிலையில் இந்த மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று கோரிக்கை முன்வைத்தது.
இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு வருகிற நவம்பர் 10 ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்ற தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அந்த மாநில அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.